Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 3, 2019

பிளஸ்டூ தேர்வான மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: ஒரு வருட பயிற்சியுடன் வேலை அளிக்கிறது எச்.சி.எல் நிறுவனம் - பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு

பிளஸ்டூ தேர்வான மாணவர்களுக்கு அரிய வாய்ப்பாகஒராண்டு உதவித்தொகையுடன் கம்யூட்டர் இன் ஜினியர் பயிற்சியும், பின்னர் 3 ஆண்டு சம்பளத்துடன் வேலையும் அளிக்க முன்வந்துள்ளது எச்.சி.எல் நிறுவனம். மூன்றாண்டு பணி முடியும்போது பட்டப்படிப்பு சான்றிதழும் வழங்கப்படுகிறது.



இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்படி பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. பிளஸ்டூ தேர்வில் அறிவியலை பாடமாக எடுத்து வெற்றிப்பெறும் மாணவர்கள் பல லட்சம் செலவு செய்து இன்ஜினியரிங் படிக்கிறார்கள். ஐந்தாண்டு படிப்பு முடித்தப் பின்னர் கல்விக்காக வாங்கின கடனும், சான்றிதழும் மட்டுமே உள்ளது. அனுபவம் ஜீரோ என்கிற நிலையில் சான்றிதழை வைத்து குறைந்த சம்பளத்துக்கு வேலை கிடைக்கும் நிலை உள்ளது. ஆண்டுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பொறியாளர்களாக வெளியே வந்தாலும் கிடைக்கும் வேலை என்னவோ சம்பந்தமில்லாததுதான். இந்நிலையில் படித்த இளைஞர்கள் தகுதி இல்லாத வேலைகளில் வாடும் நிலை உள்ளது. இதை மாற்றும் விதத்தில் பிளஸ்டூ படித்த மாணவர்கள் படிக்கும்போதே வேலை வாய்ப்பும், அதனுடன் 3 ஆண்டு வேலை உறுதியும், வெளியே வரும்போது பட்டதாரி சன்றிதழுடன் 4 ஆண்டு அனுபவ சான்றிதழையும் அளிக்கிறது பிரபல மென்பொருள் நிறுவனமான எச்.சி.எல் நிறுவனம்.அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு: பிளஸ் டூ பொதுத் தேர்வில் கணக்கு மற்றும் வணிகக் கணிதம் பாடத்தில் 60 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.



பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: "அரசுப் பள்ளிகளில் பயின்று 60 விழுக்காட்டுக்கு மேல் மதிப்பெண் பெற்று கணக்கு மற்றும் வணிகக் கணிதம் பாடத்தினை பயின்ற மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் கல்விப் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆகவே, முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறி மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இதுகுறித்துமாணவர்கள் அறிந்துக்கொள்ள 84380 02947 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். chennai.hcl@hcl.com என்ற மின்னஞ்சலிலும் சுய விவரக் குறிப்பை அனுப்பி கலந்து கொள்ளலாம்.அதுமட்டுமன்றி 84483 86390, 84483 86392 என்ற எண்களில் மிஸ்ட் கால் அளித்தால் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து ஹெச்.சி.எல் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் தரப்பில் கூறியுள்ளதாவது, "பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து பிளஸ் டூ வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் பயின்று கணக்கு மற்றும் வணிகக் கணிதம் பாடத்தில் ஏதாவது ஒன்றினை எடுத்து 60 விழுக்காடு மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் ஒரு வருடப் பயிற்சிக்கு பின்னர் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். பயிற்சி முடித்த பின்னர் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் ஐடி இன்ஜினியரிங் பணியில் அவர்கள் அமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு ஆண்டிற்கு 2 லட்சம் முதல் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை (மாதம் ரூ. 17 ஆயிரம் முதல் 23 ஆயிரம் வரை) சம்பளமாக வழங்கப்படும். மாணவர்களுக்குப் பயிற்சியின்போது உதவித் தொகையாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தங்கும் வசதியும் ஏற்படுத்தித் தரப்படுகிறது. மாணவர்கள் மூன்றாண்டு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் போதே சாஸ்த்ரா பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி ஆகிய கல்வி நிறுவனங்களில் பிசிஏ, பி.எஸ்சி(ஐடி), எம்எஸ்சி போன்ற படிப்புகளையும் பயில முடியும். மாணவர்கள் முதலாமாண்டு பயிற்சியில் சேரும்போது, எந்தவிதமான கல்விக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை.



இந்தப் பயிற்சிக்கான கல்விக் கட்டணமான ரூ.2 லட்சம் வங்கிக் கடனாக ஏற்பாடு செய்துத் தரப்படும். மாணவர்கள் பணியில் சேர்ந்த பின்னர் ஐந்து ஆண்டிற்குள் இந்த கட்டணத்தைத் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. பணிபுரியும் போதே பட்டப் படிப்பினை முடித்து விடுவதால் பட்டம் பெறவில்லை என்று வருத்தப்படத் தேவையில்லை. தகவல் தொழில்நுட்பத் துறையைப் பொறுத்தவரை குறிப்பிட்ட ஆண்டு அனுபவத்திற்குப் பின்னர் நீங்கள் என்ன பட்டம் பெற்றீர்கள் என்பதை யாரும் பார்க்க மாட்டார்கள். உங்களின் பணி அனுபவம் மற்றும் எந்த நிறுவனத்தில் பணிபுரிந்தீர்கள் என்பது மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த வாய்ப்பினை மாணவர்கள் நன்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும்," என்று தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பை தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்களும், கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். 1 ஆண்டு கல்வி கட்டணம் ரூ. 2 லட்சம் அது கல்விக்கடனாக ஏற்பாடு செய்து தரப்படும்.



பணியில் அமர்ந்தப்பின்னர் கட்டலாம். 1 ஆண்டு பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை, இலவச ஹாஸ்டல் வசதி உண்டு. 1 ஆண்டு பயிற்சியில் 9 மாதம் கல்லூரியிலும், 3 மாதம் எச்.சி.எல் நிறுவனத்தில் நேரடியாகவும் பயிற்சி 1 ஆண்டு பயிற்சிக்குப்பின் 3 ஆண்டு பணி நியமனம். பணியின்போதே டிகிரிக்கான பயிற்சியும். அடிப்படை ஆங்கிலம், அடிப்படை ஐடி பொறியியல் பயிற்சி, அனாலடிக்ஸ் பயிற்சி அளிக்கப்படும். பணியின்போது நல்ல சம்பளம், பணியை தொடரலாம் அல்லது 4 ஆண்டு அனுபவத்துடன் வேறு இடத்தில் இணையலாம்.



இதற்காக அறிவியல் பாடத்தில் குறிப்பிட்ட மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வில் வெற்றிப்பெற வேண்டும். இதற்கான வாய்ப்பை அறிவியல், கணிதத்தை பாடமாக எடுத்து பிளஸ்டூவில்தேர்ச்சிப்பெற்ற மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும், மற்ற மாணவர்களுக்கும்வழிகாட்டவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.