Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 17, 2019

தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் கண்ணாடி பாட்டிலில் தினமும் உணவு மாதிரி வைக்க வேண்டும்: உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டம் நடைமுறையில் உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 43 ஆயிரத்து 200 சத்துணவு மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் மூலமாக 50 லட்சம் மாணவர்கள் தினமும் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.
சத்துணவு மையங்களில் சமையல் செய்யும் பணியாளர்கள் தூய்மையான முறையில் உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
மேலும் உணவை திறந்து வைப்பதால் சில நேரங்களில் பல்லி, பூச்சி போன்றவை விழுந்து விடுகிறது.
இதனால் மாணவர்கள் பாதிக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. எனவே, மாணவர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு சமைத்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.


இதையடுத்து தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில், சத்துணவு பணியாளர்களுக்கு துண்டு, சோப்பு, நகவெட்டி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது. தினமும் கைகளை சுத்தம் செய்து நகங்களை வெட்டிக்கொண்டு பின்னர் சமையல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், சத்துணவு உண்ணும் அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி, தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் சத்துணவு சமையல் செய்யும் பணியாளர்கள், தூய்மையான முறையில் உணவு சமைக்க வேண்டும். ஏற்கனவே உள்ள சமையல் பொருட்களை முன்வரிசையில் அடுக்கி வைத்து, புதிதாக வரும் பொருட்களை பின்னால் வைத்து பயன்படுத்த வேண்டும். வாரம் ஒருமுறை கட்டாயம் ஒட்டடை அடிக்க வேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை சுண்ணாம்பு அடிக்க வேண்டும்.


இதில் மிக முக்கியமான ஒன்றாக தினமும் சமைக்கும் உணவினை அரைகிலோ அளவிற்கு கண்ணாடி பாட்டிலில் மாதிரி சேகரித்து வைக்க வேண்டும்.
அடுத்த நாள் காலையில் வந்த உடனே அந்த உணவை குப்பையில் போட்டுவிட்டு, மற்றொரு பாட்டிலில் அன்றைய தினம் சமைக்கும் உணவை சேகரித்து வைக்க வேண்டும். இதற்கு 2 கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த வேண்டும்.
இதன்மூலம், மாணவர்களுக்கு சத்துணவு சாப்பிட்டு ஏதேனும் உடல் உபாதை ஏற்பட்டாலும், சத்துணவில் என்ன கலந்துள்ளது என்று தெரிந்துகொள்ள, சேகரிக்கப்பட்ட மாதிரி உணவை ஆய்வு செய்து தெரிந்துகொள்ளலாம். எனவே சத்துணவு பணியாளர்கள் இதனை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.


இதனை பின்பற்றாத பணியாளர்கள் மீது அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலமாக பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.