Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 12, 2019

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) முதல் 3 நாள்கள் நடைபெற இருந்த ஆசிரியர்கள் பணியிட மாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை, கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வு, இடமாறுதலுக்கான கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து ஆசிரியர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிறப்பித்த அரசாணைக்கும், மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அரசாணைக்கும் மிகப்பெரிய முரண்பாடுகள் உள்ளன.

இந்த முரண்பாடுகளைக் களையாமல், கலந்தாய்வு நடத்தக்கூடாது. இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோருக்கு இடமாறுதல் மற்றும் பணி நிரவலுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமையன்றுத் தொடங்கி 3 நாள்கள் நடைபெற உள்ளது. எனவே, இந்த கலந்தாய்வுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் நளினி, வழக்குரைஞர் நீலகண்டன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஆசிரியர்கள் கலந்தாய்வு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவுகளில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. எனவே, கலந்தாய்வு நடத்த அனுமதித்தால் குழப்பம் ஏற்படுவதோடு, தவறுகள் நடக்கவும் வாய்ப்புள்ளது.


எனவே, இந்த குழப்பங்களை சரி செய்ய வேண்டும். அதுவரை ஆசிரியர்கள் கலந்தாய்வு தொடர்பாக தமிழக அரசு கடந்த ஜூன் 20-ஆம் தேதி பிறப்பித்த அரசாணைக்குத் தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.