Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 20, 2019

மாநில விருதுகளுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு பாடநூல் பெயர் தெரியவில்லை

ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ல் வரும் ஆசிரியர் தினத்தில்அவர்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் விருதுகள் பிஹாரில் வழங்கப்படுகின்றன.
இதற்காக அம்மாநில அரசின் பள்ளி மற்றும் மதரஸாக்களின் ஆசிரியர்கள் மாவட்ட கல்வித் துறை அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதை சரிபார்க்கும் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்களை அழைத்து நேர்முகத் தேர்வும் நடத்துகின்றனர். இதில் தேர்வு பெற்றவர்கள் மாநிலத் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுகிறது.

மாநிலம் சார்பிலும் ஒரு நேர்முகத் தேர்வை நடத்தி ஆசிரியர்கள் பெயரை தேசிய விருதுக்காகவும் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில், வரும் செப்டம் பரில் வழங்கப்பட உள்ள விருது களுக்காக பிஹாரின் 23 பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பித் திருந்தனர். இவர்களை மாவட்ட தலைமையகங்களுக்கு அழைத்த கல்வி அதிகாரிகள், நேர்முகத் தேர்வை நடத்தி உள்ளனர். அதில் தம் மாணவர்களுக்கு அந்த ஆசிரியர்கள் போதிக்கும் பாடநூல்கள் பற்றி கேட்டுள்ளனர். இதற்கு பெரும்பாலான ஆசிரி யர்கள் அது பற்றி தமக்கு தெரியாது எனக் கூறி அதிகாரிகளை அதிர வைத்துள்ளனர்.



இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பிஹாரின் கல்வி அதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்த வருடம் முதல் இணையதளம் மூலம் விருதுக்கான மனுக்கள் கோரப்பட்டது ஆசிரியர்களுக்கு பிரச்சினையாகி உள்ளது. இதற்கு முன் நேரடியான, தபால் மூலமான மனுக்களால் லஞ்சம் கொடுத்து பலரும் விருது களை பெற்று வந்தனர். இப்போது அவர்கள் நடத்தும் பாடநூல்களின் பெயர்களே ஆசிரியர்களுக்கு தெரியவில்லை. இதற்கு அந்த ஆசிரியர்கள் தாங்கள் எந்த பாடங் களை கற்பிக்க நியமிக்கப் பட்டார்களோ அதைவிடுத்து வேறு பாடங்களை போதிப்பதே காரணம் ஆகும்’’ எனத் தெரிவித்தனர்.



பிஹார் மாநில பள்ளி ஆசிரியர்களின் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் மறுதேர்வுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் பிறகும் பல ஆசிரியர்களின் தகுதி கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையிலும் அவர்களில் பலர் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற முயன்றதால் இந்த அவலநிலை வெளியாகி உள்ளது.