Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 19, 2019

தமிழக அரசுக்கு எப்போதும் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை: பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் திருச்சுழி தங்கம் தென்னரசு(திமுக) சிறப்பு கவனம் ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசுகையில், “ தமிழகத்தில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 1,248 பள்ளிகளை மூடிவிட்டு நூலகமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை கைவிட்டு அந்தப் பள்ளிகளை தொடர்ந்து நடத்த வேண்டும்.



மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட கிராப்புற நூலகங்களை திறந்து செயல்படுத்த வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “ தமிழகத்தில் 1248 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. அவற்றில் 45 பள்ளிகளில் ஒரு மாணவருக்கு கூட இல்லை. அப்படிப்பட்ட பள்ளிகளை தேர்வு செய்து தற்காலிகமாக நூலகமாக இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். அரசுப் பள்ளிகளை பொறுத்தவரை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஒரு மாணவரும் இல்லாத பள்ளியில் ஆசிரியர் இருந்து என்ன பணியை ஆற்ற போகின்றனர்.


எனவே, மாணவர்கள் இல்லாத பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் 1 முதல் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு பணியமர்த்தப்படுகிறார்கள். 2 ஆசிரியர்களை அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்றினால் அங்கு 4 ஆசிரியர்கள் பணியாற்றும் நிலை ஏற்படும்.
இதனால் மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்க முடியும். தமிழக அரசுக்கு எப்போதும் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை. அதே போல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஊராட்சி நூலகங்களை திறந்து செயல்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.