Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 16, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீடு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பு: மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடவாரியாக அகமதிப்பீடு வழங்குவது குறித்த வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
இதை அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களும் பெற்றுக்கொண்டு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்க
ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அதன்படி, தொழிற்கல்வி செய்முறை தவிர்த்த இதர பாடங்களுக்கு அகமதிப்பீடாக 10 மதிப்பெண் வழங்க வேண்டும்.

இதில், அதிகபட்சமாக வருகைப்பதிவுக்கு 2 மதிப்பெண், உள்நிலை பருவத்தேர்வுகளுக்கு 4, ஒப்படைவு, களப்பணிக்கு 2 மற்றும் மரம் வளர்த்தல், இலக்கிய மன்றம் உள்பட கல்வி இணை செயல்பாடுகளுக்கு 2 மதிப்பெண் ஒதுக்க வேண்டும். இதேபோல், தொழிற்கல்வி செய்முறை உள்ள பாடத்துக்கு அகமதிப்பீடாக 25 மதிப்பெண்கள் அளிக்க வேண்டும். அதில், அதிகபட்சம் வருகைப்பதிவுக்கு 5 மதிப்பெண், பருவத்தேர்வுகளுக்கு 10, ஒப்படைவு, களப்பணிக்கு 5 மற்றும் கல்வி இணை செயல்பாடுகளுக்கு 5 மதிப்பெண் வழங்க வேண்டும்.
இத்தகைய அறிவுறுத்தல்களை பின்பற்றி ஆசிரியர்கள் நடுநிலையுடன் அகமதிப்பீடு வழங்க வேண்டும். மாணவர்கள் பெறும் மதிப்பெண் விவரங்களை படிவங்களில் பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்க வேண்டும். மேலும், அகமதிப்பீடு விவரங்களை தகவல் பலகை வாயிலாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.