Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, September 8, 2019

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: கூட்டமைப்பினர் வலியுறுத்தல்

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:பகுதி நேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து விடுத்து வருகிறோம். ஜெயலலிதா ஆட்சியில் 2011-12ம் கல்வி ஆண்டில் 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பாடப்பிரிவில் தற்காலிக பணியிடங்கள் உருவாக்கி தகுதி உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்டனர். அப்போது தரப்பட்ட 5 ஆயிரம் சம்பளத்தை 2ஆயிரம் உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு நிலுவைத்தொகையோடு வழங்கினார்.

இதனால் சம்பளம் 7ஆயிரம் என உயர்ந்ததோடு அனைவருக்கும் 12ஆயிரம் நிலுவைத்தொகையும் கிடைத்தது. எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின்னர் ஆகஸ்ட் 2017ல் தொகுப்பூதியத்தை ரூபாய் 700 மட்டுமே உயர்த்தினார். ஜெயலலிதா காலத்தில் ஒரேயடியாக 2ஆயிரம் உயர்த்தி ஏப்ரல் முதல் கணக்கிட்டு நிலுவைத்தொகையோடு கொடுத்ததுபோல இம்முறை கொடுக்கப்படவில்லை. இதனால் சம்பளம் மட்டும் 7ஆயிரத்து 700 ஆனது. ஆனால் ஒட்டுமொத்தத்தில் கடந்த 8 ஆண்டுகளில் சம்பள உயர்வாக தரப்பட்ட ரூபாய் 2 ஆயிரத்து 700 மிகவும் குறைவானதாகும். கடைசியாக ஊதியம் உயர்த்தி 2ஆண்டுகள் முடிந்துவிட்டது. எனவே புதிய சம்பள உயர்வு குறித்து அரசும் அதிகாரிகளும் அறிவிப்புகளை வெளியிடவேண்டும்.

ரூபாய் 7ஆயிரத்து 700 குறைந்த சம்பளத்தில் 9 கல்விஆண்டுகளாக பணிபுரியும் எங்களுக்கு உதவிடும்வகையில் சம்பள உயர்வுக்கு வழிவகுக்கும் 7வது ஊதியக்குழுவின் 30 சதவீதம் புதிய சம்பள உயர்வு அமல்படுத்தி இருக்கலாம். தற்போது ஒருபள்ளியில் வேலைபார்க்கும் எங்களுக்கு கூடுதலாக பள்ளிகளை வழங்கி சம்பளம் உயர்வுக்கு வழிவகுத்து இருக்கலாம். ஆந்திர மாநில பகுதிநேர ஆசிரியர்களைப்போல ரூபாய் 14,203 சம்பளம் கொடுத்து இருக்கலாம்.


ஆனால் சம்பள உயர்வு குறித்து கவனம் செலுத்தாமல் கல்வித்துறையினர் மவுனம் காத்துவருவது தொகுப்பூதியத்தில் இருக்கும் எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். இதனால், எங்களின் பணியிடங்களை நிரந்தரப்படுத்தி 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பநலன்கருதி கல்வி அமைச்சரும், முதல்வரும் மனிதநேயத்துடன் புதிய அரசாணை பிறப்பித்து அவரவர் பாடப்பிரிவுகளில் சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்யவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment