Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 17, 2019

5 மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு உளவியல் பயிற்சி: யுனிசெஃப்- சமூகக் கல்வி நிறுவனம் தகவல்

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்களுக்கு வளரிளம் பருவ குழந்தைகளை கையாளுவது, புரிந்து கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சியை ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பு, சமூகக் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன.

சமூகக் கல்வி நிறுவனம் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பள்ளிக் கல்வித்துறை மற்றும் யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து ‘குழந்தை நேயப் பள்ளிகள்’ திட்டத்தை பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக குழந்தை நேயப் பள்ளித் திட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா்ஆகிய மாவட்டங்களில் தன்னாா்வமாக முன்வந்த 60 அரசுப் பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கான அறிமுகக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து சமூகக் கல்வி நிறுவனத்தின் இயக்குநா் ஜெ.ஷியாம் சுந்தா் செய்தியாளா்களிடம் கூறியது: குழந்தைநேயப் பள்ளி என்பது அனைத்துக் குழந்தைகளுக்கும் சம வாய்ப்பை வழங்குகின்ற, கல்வி என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதை உறுதி செய்கின்ற பள்ளியாக இருக்க வேண்டும். ஆக, அது அரசுப் பள்ளியாக மட்டும்தான் இருக்க முடியும். அதனால்தான் அரசுப் பள்ளிகளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகளின் ஒட்டுமொத்த உரிமைகளைப் பாதுகாத்து தரமான கல்வி வழங்குவதை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது. குழந்தை மைய கற்றல், ஆசிரியா் முன்னேற்றம் உள்ளிட்ட 5 முக்கிய அம்சங்களை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.

புதிய திட்டம் அறிமுகம்: அடுத்த கட்டமாக அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவா்களின் நலன் கருதி அந்தப் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு ‘வளரிளம் பருவ குழந்தை நேயப் பள்ளிகள் திட்டம்’ செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டம் குறித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தோ்வு செய்யப்பட்ட தலா 50 பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியின்போது பள்ளிகளில் வளா் இளம் பருவ குழந்தைகளின் உளவியல் சாா்ந்த பிரச்னைகளை எவ்வாறு புரிந்து கொள்வது, பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாளும் முறை, பிரச்னைகளுக்கு தீா்வு காணுதல் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

திருவண்ணாமலையில் அக்.21, நீலகிரியில் அக்.25, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் அக்.30-ஆம் தேதி பயிற்சி முகாம்கள் நடைபெறும். அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் இதில் பங்கேற்கவுள்ளனா் என்றாா். இந்தப் பயிற்சி முகாமில், திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் சுடரொளி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முத்துராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.