Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 14, 2019

பிரதமர் மோடிக்கு பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கேட்டு கடிதம்.

இந்திய அரசு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை RTE பரிந்துரைகளை சர்வ சிக்.ஷா அபியான் மூலம் நாடு முழுவதும் அமுல்படுத்தியது. 6 முதல் 14 வயதுள்ள மாணவர்கள் பயனடைய பகுதிநேர ஆசிரியர்கள் ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் கணினி அறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் பாடங்களில் நியமித்து கொள்ள மாநில அரசுகளுக்கு ஒப்புதல் அளித்தது. இதற்கான நிதி பங்களிப்பு மத்திய அரசு மற்றும் மாநில அரசு மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் தீர்மானிக்கப்ட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தற்போது சமக்ரா சிக்.ஷா என பெயர் மாற்றப்பட்டு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மற்ற மாநிலங்களைப்போல தமிழ்நாடு மாநில அரசும் பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்க அரசாணையிட்டு உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி ஆகிய பாடங்களில் 16549 பகுதிநேர ஆசிரியர்களை மாதம் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் கடந்த 2012ம் ஆண்டு நியமித்தது.
8 வருடங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு இதுவரை ரூ.2700 ஊதியம் உயர்த்தி தற்போது ரூ.7700 தொகுப்பூதியமாக தரப்படுகிறது.
மத்திய அரசு 7வது ஊதியக்குழு புதிய சம்பளத்தை கடந்த 2017ம் ஆண்டு அமுல்படுத்தியது. தமிழகத்திலும் 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் புதிய சம்பளம் அமுல்படுத்தப்பட்டது. ஆனால் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றவர்களுக்கு 30% ஊதிய உயர்வானது இன்னும் அமுல்செய்யாமல் உள்ளனர். குறிப்பாக மத்திய அரசின் திட்ட வேலையில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு இன்னும் தரப்படாமல் உள்ளது.
மகளிர் பணியாளர்களுக்கு 9 மாதம் ஊதியத்துடன் மகப்பேறு கால விடுப்பு, இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு குடும்பநலநிதி, போனஸ், EPF, ESI, மருத்துவ விடுப்பு போன்ற சலுகைகள் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை ஊதிய உயர்வுடன் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என தொடர்ந்து பல வழிகளில் அரசின் கவனத்தை ஈர்த்திட முயன்று வருகின்றனர். சட்டசபையிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் பகுதிநேரஆசிரியர்கள் கோரிக்கைகளை எடுத்துரைக்கின்றனர். இதன் பயனாக 2017ம் ஆண்டு பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். மேலும் 3 மாதத்தில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். ஆனால் 2 ஆண்டுகள் முடிந்தும் பணிநிரந்தரம் செய்யவோ, பணிநிரந்தரம் செய்ய கமிட்டியோ அமைக்கவில்லை. இப்போது மத்திய அரசு போதுமான நிதியை தருவதில்லை, பகுதிநேர ஆசிரியர்கள் மத்திய அரசின் திட்டவேலையில் நியமிக்கப்பட்டவர்கள், அதனால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரமும், ஊதிய உயர்வும் தமிழக அரசால் செய்ய முடியாது என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து வருகிறார். இதனால் பணிநிரந்தரத்தை எதிர்பார்த்து இருக்கும் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர். .
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியது:-
9 கல்விஆண்டுகளாக மத்திய அரசின் திட்ட வேலையில் அரசுப் பள்ளிகளில் ரூ.7700 குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறோம்.அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி உயர்த்தப்படும்போது தொகுப்பூதிய பணி செய்துவரும் எங்களுக்கு வருடாந்திர ஊதியஉயர்வு சரிவர தரப்படுவதில்லை. இக்குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை நடத்த சிரமப்படுகிறோம். தமிழக அரசிடம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டால் மத்திய அரசு போதிய நிதி தருவதில்லை என கைவிரித்துவிடுகிறது. ஏற்கனவே சட்டசபையில் பள்ளிக்கல்விஅமைச்சர் செங்கோட்டையன் உறுதிஅளித்தபடி பணிநிரந்தரம் செய்யாமல் பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியஅரசின் திட்டத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம். எனவே எங்களின் வாழ்வாதாரம் நலன் காத்திட வேண்டி பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
மத்திய அரசு மனிதவளத்துறை மேம்பாட்டுத்துறை இலவச கட்டாய கல்வியை நடைமுறைப்படுத்தி மாணவர்கள் நலன்கருதி நிதிஒதுக்கி இத்திட்ட வேலையில் பகுதிநேர ஆசிரியர்களை ஈடுபடுத்துகிறது, இதில் ஈடுபடுத்தப்படும் இவ்வாசிரியர்களின் நலனும் மேம்படுத்தப்படவேண்டும் என்பதை ஆராய்ந்து மத்திய அரசின் குறைந்தபட்ச சம்பளத்தை வழங்கவும், மத்திய அரசின் புதிய ஊதிய சட்டத்தையும் பணிநிரந்தரம் செய்யும்வரை செயல்படுத்தி எங்களை பிரதமர் பாதுகாத்திட எங்கள் கோரிக்கைக்கு மனிதநேயத்துடன் பாரதப்பிரதமர் அவர்கள் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வாழ்வளிக்க வேண்டுகிறோம் என்றார்.