Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 12, 2019

மாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா? அப்ப இத செய்யுங்க...



தற்போது உயர் இரத்த அழுத்தம் பொதுவான பிரச்சனையாக உள்ளது. நிபுணர்களின் படி, ஒருவரது இரத்த அழுத்தத்தை சோதிக்கும் போது, 140/90 ஆக இருந்தால், அது உயர் இரத்த அழுத்தமாக கருதப்படுகிறது. அதாவது ஒருவரது இரத்த அழுத்தம் தொடர்ச்சியாக நீண்ட நேரம் அதிகமாக இருந்தால், அது தான் உயர் இரத்த அழுத்தமாகும். இந்த பிரச்சனையைக் கவனித்து ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், பல தீவிரமான பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும்.


ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணிகளாக இருப்பது, உணவில் அதிகமாக உப்பை சேர்ப்பது, கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்பது போன்றவைகள் தான். உயர் இரத்த அழுத்த பிரச்சனையானது அமைதியாக இருந்து ஆளைக் கொல்லக்கூடியது.


ஏனெனில் இந்த பிரச்சனைக்கான அறிகுறிகளானது அன்றாடம் நாம் சந்திக்கும் உடல் உபாதைகளாக இருக்கும்.
மேலும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை இன்று இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதற்கு தற்போதைய மோசமான உணவுப் பழக்கங்களே முக்கிய காரணமாகும். இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. சரி, இப்போது அந்த உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கான அறிகுறிகள் மற்றும் அதை சரிசெய்யும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.



உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கான அறிகுறிகள்:
  • தலைச்சுற்றல்
  • கால் வலி
  • பிடிப்புக்கள்
  • அசாதாரண இதய துடிப்பு
  • தூக்கமின்மை
இந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து விட்டுவிட்டால், நிலைமை மோசமாவதோடு, மரணத்தைக் கூட சந்திக்க நேரிடும்.

அபாய காரணிகள்

உயர் இரத்த அழுத்தம் ஒருவருக்கு வருவதற்கு பல காரணிகள் உள்ளன. அவையாவன:
  • வயது
  • பரம்பரை
  • உடல் பருமன்
  • உடலுழைப்பில்லாமை
  • புகைப்பிடிப்பது
  • பொட்டாசியம் குறைபாடு
  • சோடியம் அதிகம் எடுப்பது
  • ஆல்கஹால்
  • மன அழுத்தம்
  • நாள்பட்ட நோய்களான சிறுநீரக நோய், சர்க்கரை நோய், தூக்கமின்மை
பொதுவாக உயர் இரத்த அழுத்தத்தை மாத்திரைகளைக் கொண்டு சரிசெய்யலாம். ஆனால் அதே சமயம் இயற்கையாகவும் சரிசெய்ய முடியும் என்பதை மறக்க வேண்டாம். எனவே தமிழ் போல்ட் ஸ்கை உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையாக சரிசெய்யும் சில வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி பாருங்கள்.



மக்னீசியம்

இதய ஆரோக்கியத்திற்கு மக்னீசியம் மிகவும் முக்கியமான சத்தாகும். மக்னீசியம் இரத்த நாளங்களை விரியச் செய்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மக்னீசியம் சப்ளிமெண்ட்டுகள் அல்லது மக்னீசியம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து 2 வாரங்கள் உட்கொண்டு வந்தால், சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதைக் காணலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.


வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், சோடியத்தால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளில் இருந்து நிவாரணம் அளித்து, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மேலும் இந்த கனிமச்சத்து இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழத்துடன், பொட்டாசியம் நிறைந்த இதர உணவுப் பொருட்களான ஆப்ரிகாட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளையும் சாப்பிடுவது நல்லது.





எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதை பல கட்டுரைகளில் பார்த்துள்ளோம். இந்த எலுமிச்சை ஜூஸை ஒருவர் தினமும் ஒரு டம்ளர் குடித்து வருவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அதிலும் எலுமிச்சை ஜூஸை காலை உணவிற்கு முன் ஒரு டம்ளர் குடிப்பதால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கட்டுப்படுத்தலாம்.

ஏனெனில் எலுமிச்சை ஜூஸ் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்வதோடு, உடலை வறட்சியடையாமல் பாதுகாக்கும். மேலும் இது தமனிகளின் சுவர்களுக்கு நன்மையை வழங்கும்.

பூண்டு

பூண்டு இரத்த அழுத்தத்தை சரிசெய்யும் மற்றும் உடலுக்கு போதுமான சல்பரைக் கொடுக்கும். சல்பர் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியை மேம்படுத்தி, இரத்த நாளங்களை விரியச் செய்யும். சிறப்பான பலன் கிடைப்பதற்கு தினடும் 2 பல் பூண்டு சாப்பிட வேண்டும். ஒருவேளை பச்சை பூண்டு சாப்பிட கஷ்டமாக இருந்தால், பூண்டு கேப்ஸ்யூலை உட்கொள்ளுங்கள்.





வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்:

  • உணவில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள்.
  • கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்.
  • காப்ஃபைன் அளவாக உட்கொள்ளுங்கள்.
  • சுறுசுறுப்புடன் செயல்படுங்கள்.
  • புகைப்பிடிப்பது மற்றும் மதுப் பழக்கத்தைக் கைவிடுங்கள்.