Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 29, 2019

டிசம்பர் 1 முதல் 'FastTag' கட்டாயம்: எப்படி வாங்குவது? எவ்வாறு பயன்படுத்துவது?

FastTag என்றால் என்ன? அதனை எங்கே,
எப்படி பெறுவது? எப்படி பயன்படுத்துவது என்ற உங்கள் கேள்விகளுக்கான தெளிவான பதில் இதோ...

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 46 கி.மீ தூர இடைவெளியில் டோல் பிளாசாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களிடம் அங்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும். அதனை தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்புப் பணிகளுக்கு அரசு பயன்படுத்திக் கொள்ளும்.




இது நாம் அனைவரும் அறிந்தது தான். சமயங்களில் வாகன நெருக்கடி காரணமாக சுங்கச் சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும். அவசரமான சூழ்நிலைகளில் இப்படி காத்திருப்பது பலருக்கு அவஸ்தையான ஒன்று தான்.

Fast tag
ஆனால் பெரும்பாலான டோல்கேட்டுகளில் 'Fast Tag' 'ஃபாஸ்ட் டேக்' என்ற ஒரு தனி லைன் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அதன் வழியாகச் செல்லும் வாகனங்கள் நிற்காமல் நேராகச் சென்று விடும். அப்படிச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் இல்லை என நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அது தவறு. அவை ’ஃபாஸ்ட் டேக்’ முறையில் சுங்கச்சாவடி கட்டணத்தை கட்டி விட்டுச் செல்கின்றன.




இப்படி அவை செல்வதன் மூலம் அங்கு பணியாளர்கள் யாரும் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே வாகன நெருக்கடியும் அங்கு ஏற்படாது.

இந்த வசதியைத் தான், வரும் டிசம்பர் மாதம் முதல் அனைத்து வாகனங்களும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 1 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் ’ஃபாஸ்ட் டேக்’ மின்னணு பரிவர்த்தனை கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியும் இதனை உறுதி செய்துள்ளார்.
ஃபாஸ்ட் டேக் என்றால் என்ன?




டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மூலம் சுங்கச்சாவடி கட்டணத்தை கட்டுவது தான் Fast Tag. கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தே மத்திய அரசு சோதனை முறையில் சில சுங்கச்சாவடிகளில் ஒரு அல்லது இரண்டு சுங்க வரிசைகளில் ஃபாஸ்ட் டேக் கட்டண முறையை அறிமுகப்படுத்தியது.


முதலில் இது பரிசோதனை முறையில் சில டோல் பிளாசாக்களில் மட்டும் நடைமுறைக்கு வந்தது. அங்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள டோல் பிளாசாக்களில் இம்முறை கட்டாயமாக்கப் பட்டுள்ளது.


ஏடிஎம் கார்டு மாதிரி ஃபாஸ்ட் டேக் என்பதும் ஒரு மின்னணு அட்டை தான். இதில் வாகன ஓட்டிகள் முன்னதாகவே ஒரு தொகையை ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வாகனங்களில் இந்த ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விடும். சுங்கச்சாவடிகளை சம்பந்தப்பட்ட வாகனம் கடக்கும் போது, அந்த ஃபாஸ்ட் டேக் அட்டையில் இருந்து தேவையான பணத்தை சுங்கச்சாவடி எடுத்துக் கொள்ளும்.


நாடு முழுவதும் 414 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் குறிப்பிட்ட சில டோல் பிளாசாக்களில் கடந்த 2016ம் ஆண்டே ஃபாஸ்ட் டேக் மின்னணு அட்டை பொருத்தப்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.




டோல் பிளாசாக்கள் அருகில் 20 முதல் 25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது அங்கு பொருத்தப்பட்டுள்ள ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்ப சாதனம், வாகன ஃபாஸ்ட்டேக் மூலம் வாகன எண், வங்கிக் கணக்கு ஆகியவற்றை சில நொடிகளில் கிரகித்துக்கொள்ளும். வாகனம் சாவடிக்கு வந்ததும் அனுமதிக்கும். அந்த இடைவெளியில் வாகன நுழைவுக்கான கட்டணம் தானாக வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்படும்.
இதற்காக மேற்கண்ட வங்கிகளில் வாகன எண்ணுடன் வங்கிக் கணக்கு தொடங்கி ஃபாஸ்ட் டேக் பெற வேண்டும். இந்த முறை மூலம் வாகனங்களும் தாமதமில்லாமல் சுலபமாக சுங்கச்சாவடிகளைக் கடக்க முடியும். அதோடு, சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கையையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துல்லியமாக கண்காணிக்க முடியும்.




ஃபாஸ்ட்டேக் வாகனங்களுக்காக ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் உள்ள 5 நுழைவு வாயில்களில் நான்கு தடங்கள் ஒதுக்கப்படுகிறது. மற்றொரு வாயிலை ஃபாஸ்ட் டேக் வசதியில்லாத வாகனங்கள் பயன்படுத்தலாம். அங்கு சுங்கச்சாவடி ஊழியர் அமர்ந்து வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பார்.
ஃபாஸ்ட்டேக் பொருத்தப்பட்ட வாகனங்கள் நாடு முழுவதும் தற்போது 21 கோடிக்கும் மேல் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதில் ஏறத்தாழ 8 லட்சம் வாகனங்கள் ஃபாஸ்ட் டேக் மின்னணு அட்டையுடன் ஓடிக் கொண்டிருக்கின்றன. தற்போது புதிதாக உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் ஃபாஸ்ட்டேக் மின்னணு அட்டையுடனேயே தயாரிக்கப்படுகின்றன. படிப்படியாக அனைத்து வாகனங்களும் இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும் என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.




ஃபாஸ்ட் டேக் கார்டை பெறுவது எப்படி?
ஃபாஸ்ட் டேக் கார்டுகள் எல்லா டோல்கேட்களிலும் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் சில ஏஜென்ஸிகள் மூலமாகவும் அது விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனிலும் இதற்காக விண்ணப்பம் உள்ளது. அதையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். https://www.fastag.org/fasttag அல்லது பேன்க்குகளின் இணையதளத்தின் இருந்தும் விண்ணப்படிவத்தை பெறலாம்.


தேவையான ஆவணங்கள்


1. சம்பந்தப்பட்ட காரின் ஆர். சி புக்.

2. கார் உரிமையாளரின் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

3. உரிமையாளரின் விபரங்கள் கே.ஓய்.சி., படிவமாக நிரப்பப்படவேண்டும்.

4. இருப்பிடச் சான்று மற்றும் அடையாள சான்றிற்காக டிரைவிங் லைசன்ஸ், ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இதில் ஏதேனும் ஒன்றின் நகல்.

ஃபாஸ்ட் டேக் கார்டு பெறுவதால் கிடைக்கும் நன்மைகள்

1. கையில் சில்லறையாக பணம் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை.




2. சுங்கச்சாவடிகளில் வாகனத்தை வரிசையில் நிறுத்தத் தேவையில்லை.

3. ஆன்லைன் மூலம் கிரெடிட்- டெபிட் அல்லது நெட் பேங்கிங் ஆகிய ஆப்ஷன்களை கொண்டு ஃபாஸ்ட் டேக்கை ரீசார்ஜ் செய்ய முடியும்.

4. சுங்கச்சாவடிகளை கடந்த பின்பு கழிக்கப்பட்ட பணம் மற்றும் மீதம் உள்ள பணம் குறித்த தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் உடனடியாக அனுப்பப்படுவதால், பேலன்ஸ் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

5. ஃபாஸ்ட் டேக் வாடிக்கையாளர்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடியும் தரப்படுகிறது.

ரீசார்ஜ் செய்யும் முறை

ஃபாஸ்ட் டேக்கை ரீசார்ஜ் செய்வது சுலபம். ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவைப்படும் தொகைக்கு ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, NEFT, RTGS, நெட் பேங்கிங் என பல வழிகளில் ரீசார்ஜ் செய்யலாம். சுங்கச்சாவடிகளிலும் நேரடியாக ஃபாஸ்ட் டேக்கை ரீசார்ஜ் செய்யும் வசதி உள்ளது.

பேலன்ஸ் செக்

ஃபாஸ்ட் டேக் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக ஐ.டி. மற்றும் பாஸ்வேர்ட் வழங்கப்படும். அதனை பயன்படுத்தி வெப்சைட் மூலம் தங்களது கார்டில் உள்ள பேலன்ஸை அவர்கள் தெரிந்து கொள்ளலாம். இனி Fast Tag-ன் அவசியம் இருக்காது எனும் சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட கார்டை பிளாக் செய்யவும் வசதி உள்ளது.

வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு அந்த கார்டை பிளாக் செய்து கொள்ளலாம். ஒருவேளை கார்டு தொலைந்து விட்டாலும், அந்த கார்டை பிளாக் செய்து விட்டு, புதிய கார்டு வாங்கிக் கொள்ளலாம். அப்போது பழைய கார்டில் இருந்த பேலன்ஸ் புதிய கார்டிற்கு மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.