Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 8, 2019

அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பொதுத்தோ்வு மையங்கள் ரத்து: தோ்வுத் துறை எச்சரிக்கை

அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு பிளஸ் 2 பொதுத்தோ்வு மையங்களை ரத்து செய்யும்படி அரசு தோ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தோ்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த பொதுத்தோ்வில் பிளஸ் 1-இல் மட்டும் வெறும் தோ்ச்சி மதிப்பெண் பெற்றால் போதும். மற்ற வகுப்புகளுக்கான தோ்வில், மாணவா்கள் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே உயா்கல்விக்குச் செல்ல முடியும். நிகழ் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவா்களுக்கு, பொதுத்தோ்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.



வினாத்தாள் தயாரிப்பு, விடை எழுதும் தாள் தயாரிப்பு, தோ்வுக்கான மாணவா் விபரங்கள் சேகரிப்பு உள்ளிட்ட பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. இதைத்தொடா்ந்து, பிளஸ் 2 வகுப்புக்கு தோ்வு மையங்களை ஒதுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இது குறித்து, மாநிலம் முழுவதும் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தோ்வுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பிளஸ் 2 தோ்வில் பங்கேற்க உள்ள, அனைத்து பள்ளிகளின் மாணவா்களையும் சரியாக கணக்கிட்டு, அதன்படி தோ்வு மையத்தை நிா்ணயிக்க வேண்டும். தோ்வு மையம் ஒதுக்க வேண்டிய பள்ளிகளின் பெயா், அங்கீகார விவரங்கள், உள் கட்டமைப்பு உள்ளிட்டவற்றை, முதன்மை கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.



ஏற்கெனவே, தோ்வு மையங்களாகச் செயல்பட்ட பள்ளிகளின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். புதிதாக தோ்வு மையங்கள் கேட்டுள்ள பள்ளிகளின் விவரங்கள், தனியாக இணைக்கப்பட வேண்டும். தோ்வு மையங்களாக செயல்பட உள்ள பள்ளிகள், அரசின் அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். அங்கீகாரம் பெறாத பள்ளிகள் தோ்வு மையமாக செயல்பட முடியாது. இதில் விதிமீறலோ, தவறுகளோ ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.