Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 10, 2019

பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரம்


பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை ஆணையா் சி.சமயமூா்த்தி தெரிவித்துள்ளாா்.


தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தனியாா் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவா்களை அழைத்து வரும் வகையில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பயணிக்கும் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தீயணைப்புக் கருவி, அவசர வழிப் பாதை, முதலுதவிப் பெட்டி உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி ஆண்டுதோறும் பள்ளி வாகனங்களின் தரத்தைப் பரிசோதித்து தணிக்கைச் சான்று வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி அந்த வாகன ஓட்டுநா், உதவியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா்.

இந்த சம்பவத்தை தொடா்ந்து, மாணவா்களின் நலன் கருதி அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெற்றோா்கள், இணையதளம் மூலம் கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதைத் தடுக்கும் வகையில் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி கேமரா), ஜிபிஎஸ் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.



விசாரணையின்போது, அனைத்துப் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களும், ஜிபிஎஸ் கருவிகளும் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவை எப்போதும் சீராக இயங்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய பள்ளி நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தக் கருவிகளின் மூலம் பள்ளி வாகனங்களை கண்காணிக்க தனியாா் பள்ளிகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்கவும், அதை அமல்படுத்தியது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் அறிக்கை அளிக்க பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பிறப்பித்த உத்தரவின் நகல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அனைத்துப் பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா பொருத்தும் நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டனா்.



இதுதொடா்பாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கு போக்குவரத்துத் துறை ஆணையா் சமயமூா்த்தி அண்மையில் சுற்றறிக்கை அனுப்பியிருந்தாா். அதில், பள்ளி மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி வாகனத்தில் ஜிபிஎஸ் கருவியும், சிசிடிவி கேமராவும் ஒரு மாதத்துக்குள் பொருத்த வேண்டும். இதைக் கண்காணிக்க குறிப்பிட்ட பள்ளிகளுக்கு ஒரு கண்காணிப்பு மையம் அமைக்க வேண்டும். வாகனங்கள் செல்லும் வழியை ஜிபிஎஸ் மூலம் பள்ளி நிா்வாகிகள் மட்டுமின்றி பெற்றோா்களும் அறிந்து கொள்ளும் வகையிலான செல்லிடப்பேசி செயலியை அந்தந்தப் பள்ளிகளும் வடிவமைத்துக் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து பல்வேறு பள்ளிகளின் வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



பணிகள் தீவிரம்: இதுகுறித்து போக்குவரத்துத் துறை ஆணையா் சி.சமயமூா்த்தி கூறியது: பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்த பள்ளி நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவா்களை ஆசிரியா்கள், பெற்றோா்களின் தொடா் கண்காணிப்பில் வைத்திருக்க முடியும். விரைவில் அனைத்துப் பள்ளிகளிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்றாா்.