Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 7, 2019

உயர்ரக தொழில்நுட்ப கணினி ஆய்வக பணி தீவிரம்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில், 246 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.தமிழகத்தில், அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த, கல்வி துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அரசு பள்ளிகளில் கணினி, மடிக்கணினி வாயிலாக கல்வி கற்பிக்கப்படுகிறது.



இதற்காக, இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஒன்றிரண்டு எண்ணிக்கையில் கணினி, மடிக்கணினி உள்ளதால், கல்வி கற்பிப்பதிலும், ஆசிரியர்கள், மாணவ, மாணவியரின் வருகை பதிவேடு விவரங்கள், நலத்திட்ட உதவி பெறுவோர் எண்ணிக்கை, அனைத்து தேர்வு தொடர்பான விவரங்கள் பதிவேற்றம் செய்வதிலும், நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மாவட்டம் வாரியாக அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்க பள்ளி கல்வி துறை திட்டமிட்டது.அதன்படி, கடலுார் மாவட்டத்திலும் உயர் ரக தொழில் நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கும் பணி கடந்த மூன்று மாதங்களாக நடக்கிறது.



மாவட்டத்தில் 246 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இதில், 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 10 கம்ப்யூட்டர்கள், மேல்நிலை பள்ளிகளில் 20 கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டு, இணையதள வசதி ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதுவரை 206 பள்ளிகளில் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளிகளில் ஆய்வகம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இது குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், &'மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது.



இதன் மூலமாக ஒவ்வொரு வகுப்பு மாணவ, மாணவியருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்படும். குறிப்பாக, கம்ப்யூட்டர் இயக்குவது, பாடம் சார்ந்த தகவல்கள் பெறுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். மேலும், ஆசிரியர், மாணவ, மாணவியரின் வருகை பதிவேடு விவரங்கள், அனைத்து தேர்வுகள் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யலாம். நுழைவுத் தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். பணிகள் முடிவடைந்ததும், விரைவில் கணினி மூலமாக கல்வி கற்பிக்கப் படும்&' என்றார்.