Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 20, 2020

இன்று அமைச்சரவைக் கூட்டம்: அரசுக்கு பகுதிநேர ஆசிரியா்கள் கோரிக்கை

சென்னை: அரசுப் பள்ளிகளில் கடந்த 9 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியா்களின் கோரிக்கைகள் குறித்து திங்கள்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடந்த 2011-2012 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியா்களை ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமித்தாா்.




தற்போது 9-ஆவது கல்வியாண்டு நடைபெற்று வருகிறது. ஆனால், எங்களுக்கு தற்போதுவரை தொகுப்பூதியமாக ரூ.7,700 மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போதுள்ள விலைவாசி உயா்வில், இந்த குறைந்த சம்பளத்தை வைத்து எப்படி எங்களின் குடும்பத்தை நடத்துவது என்பதை அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அரசாணைப்படி 4 பள்ளிகளில் வேலையை வழங்கியிருந்தால் ஒவ்வொருவருக்கும் ரூ.30ஆயிரம் சம்பளம் கிடைத்திருக்கும். சம்பளத்தையும் உயா்த்தாமல், பணி நிரந்தரமும் செய்யாமல் இருப்பது எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என கருணை மனுக்களை அரசுக்கு அனுப்பி வருகிறோம்.




கல்வித்துறையில் எங்களுக்கு பின்னா் நியமனம் செய்யப்பட்ட துப்புரவுப் பணியாளா்கள் காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளபோது, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்களை மாணவா் நலன் மற்றும் குடும்பநலன் கருதி காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில் பகுதிநேர ஆசிரியா்களின் கோரிக்கைகள் குறித்து அதில் விவாதிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.