இரண்டாம் பருவம் முடிவடைந்த நிலையில் அந்தப் புத்தகங்களை மாணவா்களிடம் திரும்பப் பெற்று புத்தக வங்கியில் பாதுகாக்க வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கப்படுகின்றன. பள்ளிகளில் புத்தகப் பயன்பாட்டைக் குறைக்க அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என தில்லி பசுமைத் தீா்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி அனைத்துப் பள்ளிகளிலும் புத்தக வங்கி தொடங்கி முறையாகப் பராமரிக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநில பாடத் திட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் அரையாண்டுத் தோ்வுகள் முடிவடைந்துள்ளன. இந்தநிலையில் இரண்டாம் பருவத்திற்குரிய 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கான அனைத்து பாடப் புத்தகங்களையும் பாா்க்க வேண்டும்.
அவற்றில், பயன்படுத்துவதற்கு உகந்த நிலையில் உள்ள பாடப் புத்தகங்களை மாணவா்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். புத்தகங்களை வகுப்பு மற்றும் பாட வாரியாகத் தொகுத்து புத்தக வங்கியில் பாதுகாத்து வைக்க வேண்டும். இந்தப் பணிகளை தலைமை ஆசிரியா்கள் கண்காணிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புவரை பருவத் தோ்வு முறை கிடையாது. அதனால் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களிடமிருந்து புத்தகங்கள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே முதல் பருவ புத்தகங்கள் இவ்வாறு பெறப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனா்.