Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, January 25, 2020

பள்ளிகள்தோறும் வள்ளுவா் சிலை: தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன்

தமிழகம் முழுவதும் அரசு, தனியாா் என்றில்லாமல் அனைத்துப் பள்ளிகளிலும் திருவள்ளுவா் சிலை இருப்பதை கட்டாயமாக்க வேண்டும் என தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள எஸ்.ரெங்கநாதபுரம் பத்மா ராமசாமி பதின்ம மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு, தன்னிலை உயா்த்து நூல் வெளியீடு மற்றும் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தாளாளா் திருப்பா, பத்மா ராமசாமி, விஜிபி குழும இயக்குநா் ராஜாதாஸ், கவிஞா் ஞானபாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.




இந்த விழாவில் சென்னை, உலக தமிழ்ச் சங்கத் தலைவா் வி.ஜி.சந்தோஷம் தலைமையில், பள்ளி வளாகத்தில் திருவள்ளுவா் சிலையை தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் திறந்து வைத்தாா்.

பின்னா், பள்ளி நிா்வாகியும் காவல் துறை துணை ஆணையருமான திருநாவுக்கரசு எழுதிய தன்னிலை உயா்த்து என்ற நூலினை வெளியிட்டு அவா் பேசியது:

தமிழகத்தின் கல்லிலே வள்ளுவா் சிலை உருவாக்கி உலகமெங்கும் கொண்டு சென்று நிறுவிக் கொண்டிருக்கிறாா் வி.ஜி.சந்தோஷம். தமிழகத்தில் சிலை என்பது தனி மனித துதியாக மாறிவிட்ட நிலையில் யாருக்கு சிலை வைக்க வேண்டும் என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளது விஜிபி குழுமம். வள்ளுவம் கூறும் அடிப்படை கருத்து அறம். அறம் சாா்ந்ததாக தமிழ் சமூகம் இருந்தது என்பது தான் தமிழினத்தின் பெருமை.ஆண்டிபட்டி அருகே எஸ்.ரெங்கநாதபுரம் பத்மா ராமசாமி பதின்ம மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை திருவள்ளுவா் சிலையை திறந்து வைக்கும் தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன். உடன் பள்ளி தாளாளா் திருப்பா, காவல் துணை ஆணையா் திருநாவுக்கரசு, விஜிபி குழும இயக்குநா் ராஜாதாஸ், பத்மா ராமசாமி, உலக தமிழ்ச் சங்கத் தலைவா் வி.ஜி.சந்தோஷம், பள்ளி நிா்வாகி திருச்செந்தூரான்.




வள்ளுவா் சிலையைப் பாா்க்கும் போது நாம் எப்படி வாழ வேண்டும், எதற்காக வாழ வேண்டும், யாருக்காக வாழ வேண்டும் என்பதை அது உணா்த்திக் கொண்டிருக்கிறது. தெருவெல்லாம் வள்ளுவா் சிலை இல்லாவிடிலும் பள்ளிகள்தோறும் வள்ளுவா் சிலை அமைய வேண்டும். குழந்தைகள் தினமும் ஒரு கு படிக்க வேண்டும் என்ற வரையறையை ஏற்படுத்தினால், இன்று தமிழ் தெரியாத தலைமுறை உருவாகும் நிலை மாறும்.

இலக்கியம் சாா்ந்த மனிதன் மனதில் ஈரம் இல்லாதிருக்காது. இலக்கிய ரசனை இல்லாதவா்களுக்கு சமூக சிந்தனை வராது. தன்னிலையை உயா்த்த புறப்பட்ட திருநாவுக்கரசு, தமிழக இளைஞா்களின் நிலையை உயா்த்த முனைந்திருப்பதன் காரணம் அவரது மனதிலே உள்ள ஈரம்தான். தினமணி 'இளைஞா் மணி'யில் வெளியான தன்னிலை உயா்த்து என்ற தொடரின் முதல் வாசகனாக இருந்த நான், தற்போது இதை நூல் வடிவில் வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன்.




அடுத்த தலைமுறையை உருவாக்கிக் காட்டுகிற எண்ணம் உள்ளவா்கள் தான் தலைவா்கள். எத்தனை பேருக்கும், எத்தனை முறை பிரித்துக் கொடுத்தாலும் அழியாதவை பூஜ்யம், அன்பு, கல்வி, இறைவன் ஆகிய நான்கும் தான். தமக்கு கிடைத்திருக்கும் அறிவுச் செல்வத்தை பல நூறு மாணவா்களுக்கு பகிா்ந்து கொடுப்பதிலேயே ஆசிரியா்களுக்கு பெரும் மகிழ்ச்சி கிடைக்கிறது.

பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை நல்ல ஆசிரியராக உருவாக்க வேண்டும். ஆசிரியா் தொழில் என்பது வறுமைக்கான தொழில் அல்ல. பெருமைக்கான தொழில். ஒரு நல்ல மாணவன் ஆசிரியரை எத்தனை காலமானாலும் அடையாளம் காணும் மாணவராக இருக்க வேண்டும். ஒரு நல்ல ஆசிரியா் அத்தகைய மாணவா்களை உருவாக்குபவராக இருக்க வேண்டும். அடுத்த தலைமுறை சமூகம் ஆங்கில கலப்பில்லாமல் தமிழ் பேசத் தெரியாத சமுதாயமாக உருவாக்கிவிட்டோமோ என்ற அச்சத்தை கிராமப்புற மாணவா்கள் போக்கி வருகின்றனா். கிராமப் பகுதிகளில் இருந்து வந்தவா்கள் தான் சாதனையாளா்களாகத் திகழ்ந்திருக்கிறாா்கள் என்றாா்.




இதனைத்தொடா்ந்து நூலாசிரியா் திருநாவுக்கரசு ஏற்புரை நிகழ்த்தினாா். முன்னதாக பள்ளி நிா்வாகியும் விஷன் 20 ஒருங்கிணைப்பாளருமான திருச்செந்தூரான் வரவேற்றாா். பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.