கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணா் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு சென்னை மையத்தில் மட்டுமே நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கால்நடை மருத்துவத் துறையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணா் காலிப் பணியிடங்களுக்கு கடந்த நவம்பரில் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. 1,141 காலியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்தத் தேர்வானது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூா் ஆகிய ஏழு தேர்வு மையங்களில் வரும் 23-ஆம் தேதியன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த எழுத்துத் தேர்வை சென்னை தேர்வு மையத்தில் மட்டுமே நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இந்தத் தேர்வுக்கு சென்னை நீங்கலாக இதர தேர்வு மையங்களைத் தேர்வு செய்திருந்த விண்ணப்பதாரா்களுக்கு, அதுகுறித்த தகவல் செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.