Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 22, 2020

பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளை ஆசிரியர்கள் சோதனை செய்யக்கூடாது! பறக்கும் படைக்கு தேர்வுத்துறை உத்தரவு


தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13- ம் தேதி முடிவடைகிறது. இந்த தேர்விற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தேர்வின்போது முறைகேடுகளைத் தடுக்கும் பணியில் சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்கள் பறக்கும் படையில் நியமிக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் காப்பியடிப்பதை கண்காணிக்கும் பறக்கும்படை ஆண் ஆசிரியர்கள் மாணவிகளை பரிசோதிக்க கூடாது என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.




இதுதொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தேர்வுப் பணியில் நல்ல அனுபவமும், மிக்க நேர்மையும் வாய்ந்த துடிப்பான (குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவமுள்ள) ஆசிரியர்களைப் பறக்கும் படையில் நியமிக்க வேண்டும். பெண் தேர்வர்களை (மாணவிகளை) சோதனையிட பெண் ஆசிரியர்களையும் பறக்கும் படை உறுப்பினர்களாக நியமித்தல் வேண்டும்.
பறக்கும் படையில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் மிக நேர்மையுடனும் உண்மையான முறையிலும் செயல்படுபவர்களாக இருத்தல் வேண்டும். எவரிடத்திலும் அச்சமின்றியும், அதே சமயத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்பில் எல்லை மீறாமல் செயல்படுபவர்களாகவும் இருத்தல் மிகவும் அவசியம்.




அடிக்கடி புகார்களுக்கு இடமளிக்கக்கூடிய தேர்வு மையங்களை பறக்கும் படை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். அனைத்துத் தேர்வு மையங்களுக்கும் 10 அறைகளுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் நிலையான படை (தேர்வினைக் கண்காணிக்க ஆசிரியர்) அமைத்து தீவிரமாகக் கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பறக்கும் படை உறுப்பினர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் விருப்பு வெறுப்பின்றி நேர்மையான முறையில் பணியாற்றிட வேண்டும். பறக்கும் படையினர் தங்களது பணியை ஆற்றும்போது தேர்வெழுதும் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும்.
பறக்கும் படையினர் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டோரைக் கையும் களவுமாகப் பிடிக்கும்போது, தேர்வரிடமிருந்து கைப்பற்றிய விடைத்தாள் உள்ளிட்ட ஏனைய ஆவணங்களில் சம்பந்தப்பட்ட தேர்வராலேயே அவரின் பதிவெண்ணைக் குறிப்பிடச் செய்து அவரது கையொப்பத்துடன் தங்களது அறிக்கையையும் தெளிவாக எழுதி முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.




நிலையான படை குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்குச் சென்று தேர்வு அறைகளை ஒழுங்கீனச் செயலுக்கு இடமளிக்கால் பறக்கும் படை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். தேர்வு மையப் பார்வையிடலுக்கு அடையாள அட்டையைக் கட்டாயமாக அணிந்து செல்ல வேண்டும்.மேலும் சுமுகமான முறையில் பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட வேண்டும்.
பறக்கும் படையினர் முதலில் செல்லும் தேர்வு மையத்தில் வினாத்தாள் கட்டு பிரிக்கும்போது பார்வையாளராக இருத்தல் வேண்டும். இறுதியில் செல்லும் தேர்வு மையத்தில் விடைத்தாட்கள் சிப்பம் கட்டும்போது பார்வையாளராக இருத்தல் வேண்டும்.
பறக்கும் படையில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் பணியின்போது தேர்வர்கள் அச்சமுறும் வகையில் செயல்படக்கூடாது.
தேர்வர்களின் மனநிலை, உடல்நிலை, தேர்வெழுதும் நேரம் பாதிக்காத வகையில் பறக்கும் படையில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் செயல்படுதல் வேண்டும். தேர்வர்கள் கண்ணியமாக நடத்தப்படுதல் வேண்டும்.





பறக்கும் படையில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் சந்தேகத்திற்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதித்தல் போதுமானது. அனைவரையும் (கட்டாயமாக) சோதித்தல் அவசியம் இல்லை.
தவறுகளைக் கண்டுபிடிக்கும்போது விருப்பு வெறுப்பின்றி கடமையாற்ற வேண்டும். மாணவிகளை ஆண் ஆசிரியர்கள் சோதனை செய்யக்கூடாது. பெண் ஆசிரியர்களைக் கொண்டு மட்டுமே சோதனை செய்ய வேண்டும்.
பறக்கும் படை உறுப்பினர்கள் தேர்வு எழுதும் வளாகத்தினை வகுப்பறை மட்டுமின்றி, வெளிப்பகுதி, கழிப்பறை, தளப்பகுதி ஆகியவற்றையும் பார்வையிட்டு முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்பதனை உறுதி செய்துகொள்ள வேண்டும்.





தேர்வு மையத்தில் ஒழுங்கீனத்தில் ஈடுபட்ட தேர்வர்கள் எவரேனும் கண்டுபிடிக்கப்பட்டால் அந்நிகழ்வு பற்றிய செய்தியை பறக்கும்படையினரே தன்னிச்சையாக பத்திரிகைகளுக்கோ, தொலைக்காட்சிகளுக்கோ தெரிவிக்கக்கூடாது. முதன்மைக் கல்வி அலுவலர்/ மாவட்டக்கல்வி அலுவலர் போன்ற அலுவலர்களிடம் மட்டுமே தெரிவிக்கவேண்டும்.
தேர்வர்கள் துண்டுச் சீட்டு வைத்திருந்து சிக்குவது, துண்டுச்சீட்டு வைத்து அதைப் பார்த்து எழுதி சிக்குவது, விடைத்தாள்களை மாற்றி தேர்வு எழுதி சிக்குவது.மற்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடுவது. இவற்றில் எந்த வகை எனக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். வாக்குமூலம் பெறப்பட வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.