Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 16, 2020

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 31ம் தேதி தொடக்கம்: 20 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பு


சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 2ம் தேதி தொடங்கியது. இதுவரை மொழிப்பாடங்கள், கணக்கு, விலங்கியல், வணிகவியல், கணினி அறிவியல், சிறப்புத் தமிழ், உயிரி வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட பாடத் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. இன்று(15ம் தேதி) இயற்பியல், பொருளியல், கணினி தொழில் நுட்பம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 44 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் திருத்த வேண்டிய விடைத்தாள்கள், கடந்த 9ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள்கள் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.




இந்த விடைத்தாள்கள் அனைத்து மையங்களுக்கும் 29ம் தேதி சென்று சேரும். அதன்பின் 31ம் தேதி அன்று, முதன்மைத் தேர்வர்கள் விடைத்தாள்களை திருத்துவார்கள். ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை துணைத் தேர்வர்கள் விடைத்தாள்களை திருத்துவார்கள். அதற்கு பிறகு சம்பந்தப்பட்ட மொழிப்பாட ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தத் தொடங்குவார்கள். இதையடுத்து, பிற பாடத்துக்கான விடைத்தாள்கள், அந்தந்த மையங்களுக்கு 30ம் தேதி சென்று சேரும். 31ம் தேதி முதன்மைத் தேர்வர்கள் விடைத்தாள் திருத்துவார்கள். ஏப்ரல் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை துணைத் தேர்வர்கள் விடைத்தாள்களை திருத்துவார்கள். அதற்கு பிறகு அந்தந்த பாட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள். மேற்கண்ட விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்ட பிறகு, படிப்படியாக ஏப்ரல் 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை மதிப்பெண்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.




மொத்த விடைத்தாள்களும் திருத்தி முடிக்கப்பட்ட பிறகு மொத்த மதிப்பெண்களையும் குறுந்தகட்டில் பதிவு செய்யப்பட்டு தேர்வுத்துறை மற்றும் சென்னையில் உள்ள டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து, 24ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மேற்கண்ட விடைத்தாள் திருத்தும் பணிக்காக தமிழகம் முழுவதும் 44 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்படும் நிலையில் 20 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதையடுத்து சென்னை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு கல்வி மாவட்டங்களிலும் அண்ணா நகரில் ஜெஜிவிஎம் மேனிலைப் பள்ளி என மொத்தம் 5 இடத்தில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்படுகிறது. இந்த தேர்வு மையங்களில் தலா 300 ஆசிரியர்கள் என மொத்தம் 1500 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த உள்ளனர்.

No comments:

Post a Comment