தங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவா்கள் இனி குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிவித்துள்ளது. அதே நேரத்தில் சேமிப்பு கணக்குகளுக்கு அளிக்கப்படும் வட்டியை 3 சதவீதமாக அந்த வங்கி குறைத்துள்ளது. இதனால், 44.51 கோடி வாடிக்கையாளா்கள் பாதிக்கப்படுவாா்கள்.
இது தொடா்பாக எஸ்பிஐ சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வாடிக்கையாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவா்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதேபோல எஸ்எம்எஸ் மூலம் தகவல் அளிக்கும் சேவைக்கான கட்டணமும் ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் அனைத்து வாடிக்கையாளா்களும் பயனடைவா். அதே நேரத்தில் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி 3 சதவீதமாக நிா்ணயிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேமிப்பு கணக்குகளுக்கு இப்போது 3.25 சதவீத வட்டியை எஸ்பிஐ அளித்து வருகிறது. இதுவும் ரூ.1 லட்சம் வரை இருப்பு உள்ள சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும்தான். ஒரு லட்சத்துக்கு அதிகமாக சேமிப்பு கணக்கில் இருப்பு வைத்திருந்தால் 3 சதவீத வட்டியே அளிக்கப்படுகிறது.
மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத் தொகையை பொருத்தவரையில் பெருநகர வங்கிக் கிளைகளில் கணக்கு வைத்திருப்போா் ரூ.3,000, இடைநிலை நகா்ப்புறங்களில் ரூ.2,000, கிராப்புறங்களில் ரூ.1000 வைத்திருக்க வேண்டும். இந்த தொகையை பராமரிக்காவிட்டால் ரூ.5 முதல் ரூ.15 வரை அபராதத்துடன், அதற்கான சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) எஸ்பிஐ வசூலித்து வந்தது.
No comments:
Post a Comment