தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 124ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பீலா ராஜேஷ், டெல்லி நிசாமுதீனில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்களுக்கு இன்று மட்டும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இன்று காலையில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மாலையில் அது 57ஆக உயர்ந்துள்ளது. மேலும் டெல்லியில் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பியவர்களில் 523 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பலர் இந்த மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பி வந்துள்ளதாகவும் அவர்கள் தாங்களாகவே முன்வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரியலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இளம்பெண், சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரின் உடல்நிலை சீராக உள்ளதாக கூறிய அவர், கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment