சென்னை : கொரோனா வைரஸ் அறிகுறியால், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை கண்காணிக்க, 'மொபைல் ஆப்' ஒன்றை, தமிழக காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், 15 ஆயிரத்து, 492 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களின் வீடுகளில், 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு, வெளி நபர்கள் உள்ளே செல்லக்கூடாது என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப் பட்டோர், அரசிடம் தெரிவிக்காமல், வெவ்வேறு இடங்களுக்கு செல்வது தெரியவந்துள்ளது. இதனால், இவர்களை எப்போதும் கண்காணிக்க, தமிழக காவல் துறை சார்பில், 'COVID - 19 Quarantine monitor' என்ற, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து மாநில, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஜெயந்த் முரளி கூறியதாவது: தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோரை கண்காணிக்க, அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 'மொபைல் ஆப்'பில், பெயர், வயது, பாலினம், இருப்பிடம் உள்ளிட்ட விபரங்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன.
தனிமையில் இருப்போர், வீட்டை விட்டு வெளியேறினால், அவர்களின் முகவரி மற்றும் மொபைல் போன் எண்ணுடன், காவல் கட்டுப்பாட்டு அறை, போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக, 'அலெர்ட்' சென்று விடும்.தனியார் நிறுவனத்துடன் இணைந்து, 72 மணி நேரத்தில், இந்த, மொபைல் ஆப்பை வடிவமைத்து உள்ளோம். அடுத்தடுத்து, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோருடன், 'வீடியோ காலில்' பேசுவது உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment