Breaking

Monday, July 18, 2016

வேற்றுப்பொருள் வைப்பணி


34. வேற்றுப்பொருள் வைப்பணி

கவிஞன் தான் கூறவிரும்பும் சிறப்புப் பொருளை உலகமறிந்த பொதுப்பொருளைக் கொண்டு விளக்கிக் கூறுவது வேற்றுப்பொருள் வைப்பணிஎனப்படும்.


எடுத்துக்காட்டு
                பராவரும் புதல்வரைப் பயத்த யாவரும்
                 உராவரும் துயரைவிட் டுறுதி காண்பரால்
                 விராவரும் புவிக்கெலாம் வேதமே அன்ன
                இராமனைப் பயந்தஎற் கிடருண்டோ? என்றாள்!

பாடல்பொருள்:

வணங்கத்தக்க சிறந்த புதல்வரைப் பெற்ற யாவரும் துன்பம் நீங்கி நன்மை பெறுவர் என்பது பொதுப்பொருள். அப்பொதுப்பொருளைக் கொண்டு பாரெலாம் வேதமெனப் போற்றும் இராமனைப் பிள்ளையாகப் பெற்ற எனக்குத் துன்பம் உண்டோ? (இல்லை) எனும் சிறப்புப் பொருளைக் கைகேயி மந்தரையிடம் விளக்குகிறாள். ஆகவே இப்பாடல் வேற்றுப்பொருள் வைப்பணி.