Breaking

Thursday, August 22, 2019

போக்குவரத்து விதி மீறல்; செப்.,1 முதல் அபராதம் உயர்வு



புதுடில்லி: போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தை உயர்த்துவது உட்பட, மோட்டார் வாகன சட்டத்தின், 63 உட்பிரிவுகள், அனைத்து மாநிலங்களிலும் செப்., 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, கூறியதாவது: மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, பார்லிமென்டில் சமீபத்தில் நிறைவேறியது. இதையடுத்து, அச்சட்டத் திலுள்ள, 63 உட்பிரிவுகளையும், செப்., 1ல் இருந்து, நடைமுறைக்கு கொண்டு வர, முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த, 63 உட்பிரிவுகளின் கீழ், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது உட்பட, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகை, கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு, அந்த சாலையின் கட்டமைப்பே காரணமாக அமைகிறது. எனவே, விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து, குறைகளை சரி செய்வதற்காக, 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.