உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசு, மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதில் முதலிடத்தில் உள்ளது. மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல நோய்களுக்கு கொசுக்களே காரணம். 'அனாபெலஸ்' பெண் கொசுக்கள் மூலம் மலேரியா நோய் மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை, டாக்டர் ரொனால்டு ரோஸ். 1897 ஆக., 20ல் கண்டுபிடித்தார். இதை அங்கீகரிக்கும் விதமாக இந்நாளே 'உலக கொசு ஒழிப்பு தினமாக' கடைபிடிக்கப்படுகிறது.
மலேரியா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம். கொசுக்களில் மூன்று ஆயிரம் வகை இருந்தாலும், மலேரியாவை உருவாக்கும் 'அனாபெலஸ்', டெங்குவை உருவாக்கும் 'ஏடிஸ்', யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சலை உருவாக்கும் 'குளக்ஸ்' ஆகிய மூன்றும் தான் கொடியவை. யார் இவர்?ரொனால்டு ரோஸ், 1857ல் உத்தரகண்டின் அல்மோராவில் பிறந்தார். இவரது தந்தை ஆங்கிலேய ராணுவ அதிகாரி. பள்ளி மற்றும் கல்லுாரி படிப்பை லண்டனில் நிறைவு செய்தார்.படிப்பை முடித்து இந்தியா திரும்பிய பின், மலேரியாவை பற்றிய ஆராய்ச்சியில் 1882 - - 1899 வரை ஈடுபட்டார். 1897ல் மலேரியாவுக்கான காரணத்தை கண்டுபிடித்தார்.
இதற்காக 1902ல் மருத்துவ நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் பிரிட்டன் சார்பில் நோபல் பரிசு வென்ற முதல் நபர். என்ன பாதிப்பு?'பிளாஸ்மோடியம்' என்ற ஒட்டுண்ணி 'அனோபிலிஸ்' எனும் பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இந்த கொசு ஒருவரை கடிப்பதன் மூலம், மலேரியா பரவுகிறது.
இது உடலில் கல்லீரலை தாக்குகிறது. பின் ரத்த சிவப்பு அணுக்களை அழிக்கிறது. சில சமயங்களில் மரணத்தையும் ஏற்படுத்துகிறது. எப்படி தடுப்பது?* பொதுவாக கொசுக்கள் நீர்நிலைகளில் தான் முட்டையிட்டு உருவாகின்றன.
எனவே வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். * டயர்கள், தகரங்கள், பலகைகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும். * தண்ணீர் பாத்திரங்களை சுத்தமாக கழுவி தலைகீழாக வெயிலில் காய வைக்க வேண்டும். * தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.