கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ளது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 31- ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் இருக்கும் பள்ளிக்கல்லூரி மாணவர்கள் இந்த நேரத்தை ஆக்கபூர்வமாகச் செலவழிக்கும் வகையில் புதிய முயற்சியைப் புதுகோட்டை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``விடுமுறையில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் வீட்டில் இருந்தபடியே கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கதை, கவிதை மற்றும் ஓவியங்கள் வரைந்து அதைக் கீழ்க்கண்ட வாட்ஸ் அப் எண்களுக்கு அனுப்பலாம். ஓவியத்தைப் புகைப்படம் எடுத்து அனுப்பினால் போதுமானது.
ஆட்சியர்
1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளை 98651 20738 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும், 6 முதல் 8- ம் வகுப்பு வரை உள்ள மாணவ,மாணவிகள் 9443488869 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும், 9 முதல் பிளஸ்2 மாணவ, மாணவிகள் 73737 97250 என்ற எண்ணுக்கும், கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளை 9786382393 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும் அனுப்பி வைக்கலாம். மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளை மார்ச் 22 - ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரையிலும் அனுப்பலாம். அது கொரோனா வைரஸ் விழிப்புணர்வு படைப்புகளாக இருக்க வேண்டும். சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி மாவட்ட ஆட்சியர் கூறும்போது, "பொதுவாகவே குழந்தைகள் விடுமுறையின் போது ஒன்று கூடி விளையாட எண்ணுவார்கள். ஆனால் தற்போதைய சூழலில் குழந்தைகளின் ஒன்றுகூடலைத் தவிர்க்கவும் அவர்களைத் தனிமைப்படுத்தி அதே நேரத்தில் அவர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் ஓவியம், கவிதை அனுப்பும் முயற்சி மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக, இதன்மூலம் மாணவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும். மேலும் இதுபோன்ற பல ஆரோக்கியமான பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்" என்றார். மற்ற மாவட்டங்களிலும் இதை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment