
திண்டுக்கல் : பிரதமர் நிவாரண நிதி வழங்க, பெற்றோர் வகுத்து கொடுத்த திட்டத்தில், மாணவர்கள்வியாபாரம் செய்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு மார்க்கெட்டில் எண்ணெய் வியாபாரம் செய்பவர்கள், பாஸ்கரன் - ராதா தம்பதி. இவர்களுக்கு, ஸ்ரீநாத் என்ற பிளஸ் 2 படிக்கும் மகன், நர்மதா என்ற, 10ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளனர். இருவரும், பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க, பெற்றோரிடம், 2,000 ரூபாய் கேட்டனர்.'ஊரடங்கு உத்தரவால், பணம் ஏற்பாடு செய்ய முடியாது' என, பாஸ்கரன் மறுத்தார். பின், 'விவசாயிகளிடம் எலுமிச்சை, நெல்லிக்காய் வாங்கித் தருகிறேன். அவற்றை விற்று கிடைக்கும் பணத்தை, பிரதமர் நிதிக்கு அனுப்புங்கள்' என தெரிவித்துள்ளார். இதன்படி, எலுமிச்சம் பழம், நெல்லிக்காய்களை ரோட்டோரம் கூறுகட்டி ஸ்ரீநாத், நர்மதா விற்க துவங்கினர். வாடிக்கையாளர்கள் தரும் பணத்தை, அருகில் உள்ள உண்டியலில் செலுத்தும்படி கூறினர். ஸ்ரீநாத் கூறுகையில், ''வியாபாரம் செய்து, நிதி திரட்டும்படி தந்தை கூறியது எங்களுக்கு பிடித்திருந்தது. வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில், எலுமிச்சம்பழம் விற்கிறோம்.''நிவாரண நிதி உண்டியல் பார்த்து, 10 ரூபாய்க்கு வாங்க நினைப்போர் கூட, 20 ரூபாய்க்கு வாங்குகின்றனர். ஊரடங்கு விலக்கப்பட்ட பின், பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்ப உள்ளோம்,'' என்றார்.



No comments:
Post a Comment