சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார் லக்னோவை சேர்ந்த மாணவி.
12ம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் லக்னோ பகுதியை சேர்ந்த மாணவி திவ்யான்ஷி ஜெயின், 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அதாவது, ஆங்கிலம், சமஸ்கிருதம், வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் இன்சூரன்ஸ் ஆகிய பாடங்களில் 100% மதிப்பெண்களை எடுத்துள்ளார்.குடும்பத்துடன் திவ்யான்ஷி
தான் முழு மதிப்பெண்கள் பெற்றதற்கு தனது பெற்றோரும் ஆசிரியர்களுமே காரணம் என்று கூறியுள்ள திவ்யான்ஷி, பள்ளிகளில் நடத்தப்பட்ட மாதிரித் தேர்வுகளுக்காக நன்றாக படித்ததாகவும் அதன் விளைவாகவே 100% மதிப்பெண்களை எடுக்கமுடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், படிப்பு மற்றும் தூக்கத்திற்கு சரியாக நேரம் ஒதுக்கி ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றி தேர்வுக்கு படித்ததாகவும் தெரிவித்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% பெற்ற மாணவி திவ்யான்ஷிக்கு தற்போது பாராட்டுகள் குவிந்துவருகிறது.திவ்யான்ஷி
வரலாறு மீது அதிக நாட்டம் கொண்ட திவ்யான்ஷி, கல்லூரி படிப்பில் வரலாற்றை முதன்மைப் பாடமாக எடுத்து படிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், வரலாறு குறித்து ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 100% மதிப்பெண்கள் எடுத்த திவ்யான்ஷி குறித்து அவருடைய பள்ளி முதல்வர் பேசுகையில், "பள்ளிகளில் நடக்கும் தேர்வுகளிலேயே திவ்யான்ஷி அதிக மதிப்பெண்களை எடுப்பார். அவர் இதுபோன்று சாதனை செய்து அவரது பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
நேற்று வெளியான சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், 38 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் 95% மேல் மதிப்பெண்கள் எடுத்துள்ளதாகவும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 90% மேல் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment