JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, September 3, 2020

பாடச்சுமை குறைக்கப்படுமா? மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்ப்பு


கரோனா தொற்று பரவி வரும் சூழலில் கல்வித்துறை பாடச்சுமை குறைக்கப்படுமா என பெற்றோர்கள், மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் பாடப்பகுதிகள் குறைக்கப்படும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் கல்வியாண்டு தொடங்கி மூன்று மாதங்கள் ஆகியும் பாடப்பகுதி குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்படவில்லை. எந்தெந்த பாடப்பகுதிகள் குறைக்கப்படவுள்ளது என்பதை உரிய நேரத்தில் தெரிவித்தால், அந்த பாடப்பகுதிகளை விடுத்து மற்ற பாடங்களை மாணவர்கள் படிக்கு ஏதுவாக இருக்கும் என பெற்றோர்களும், மாணவர்களும் தெரிவிக்கின்றனர்.

மெட்ரிக் பள்ளிகளில் இணையதள வகுப்புகல் நடைபெறுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வாட்ஸ்-அப் மூலம் பாடக்குறிப்புகள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்படைப்புகள் (Assignements) மற்றும் குறுந்தேர்வுகள் (Small Tests) மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றனர்.

இவற்றை ஆய்வு செய்ய கல்வி மாவட்டம் தோறும் மூத்த ஆசிரியர்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப் விடியோ அனுப்புகின்ற வகையில் பல மாணவர்களின் வீட்டில் ஆண்ட்ராய்டு போன் இல்லை. ஒரு சில மாணவர்கள் வீட்டில் செல்போன் வசதியே இல்லை. கல்வியாண்டு தொடங்கி ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என மூன்று மாதங்கள் முடியும் தருவாயில் உள்ளதால், மாணவர்களைத் தொடர்புகொள்ள முடியாமலும், பாடக்குறிப்புகள் மற்றும் வினா-விடை தொகுப்புகளை மாணவர்களுக்கு அனுப்ப முடியாத நிலையில் உள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கேபிள் இணைப்பு உள்ள வீடுகளில் மட்டுமே மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் விடியோ பாடங்களைப் பார்த்து பயன்பெறும் நிலை உள்ளது. மேலும் இணையதளங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படுவதால் பெரும்பாலான மாணவர்களின் கவனம் சிதறுவதாகவும், தொடர்ந்து நாள் முழுவதும் மாணவர்கள் செல்போன் மற்றும் மடிக்கணினியைப் பார்த்து வருவதால் பார்வைக் குறைபாடு வர வாய்ப்புள்ளது என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

நிகழ் கல்வியாண்டில் மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் குறைக்கப்பட்ட பாடப்பகுதிகள் குறித்த அறிவிப்பை நாளிதழ்கள் மூலமாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் உடனடியாக அரசு கல்வித்துறை வெளியிட வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment