‘துத்திக் கீரை’ பருத்தி இனத்தைச் சார்ந்த ஒரு குறுஞ்செடி. இதற்கு ‘அதிபலா’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதை ஆங்கிலத்தில் ‘Indian mallow’ என்று அழைப்பர். இதன் இலைகள் மிகவும் பசுமையாக இதய வடிவில் இருக்கும்.
இதில் மஞ்சள் நிறத்தில் அழகான பூக்கள் பூக்கும். இதனுடைய விதை, வேர், இலை, பூ, காய் என அனைத்தும் மருத்துவத் தன்மைகொண்டது. இதன் காய்கள் தோடு போன்று காணப்படும். இது இனிப்புச் சுவை உடையது.
உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது கடற்கரை ஓரங்கள் மற்றும் சாலை ஓரங்களில் வளரக்கூடியது. இது இரண்டு முதல் மூன்று அடி உயரம் வளரக்கூடியது. 29 வகையான துத்திகள் உள்ளன. ஆனால், அதிகமாகப் பயன்படுத்தப்படுவது 'பணியாரத் துத்தி'.
மூலநோய்க்கு ஆகச்சிறந்த நிவாரணியாக துத்தி இருக்கிறது. துத்தி இலையை ஆமணக்கு எண்ணெயில் நன்றாக வதக்கி, மூலத்தில் கட்டினால் வீக்கம் குறையும்.
கையளவு துத்திக் கீரையை எடுத்து நீரில் கொதிக்கவைத்து, பனங்கற்கண்டு பாலில் கலந்து குடித்தால் மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவை நீங்கும்.
துத்தி இலைகளை நெய்யில் வதக்கி, சாதத்துடன் கலந்து 40 முதல் 120 நாட்கள் சாப்பிட்டுவர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நிற்கும்.
துத்தி இலையை நீரில் நன்றாகக் கொதிக்கவைத்து, தினமும் வாய் கொப்பளித்து வந்தால், பற்களின் ஈறுகளில் கசியும் ரத்தம் நிற்கும்.
இந்தக் கீரையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டுவர தசைகளுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதனால்தான் இது ‘அதிபலா’ என்று அழைக்கப்படுகிறது.
உடலில் எதேனும் புண்கள் ஆறாமல் இருந்தால், இதன் இலையைப் பிழிந்து சாறு எடுத்து, மஞ்சளுடன் கலந்து பூசிவர புண்கள் விரைவில் குணமாகும்.
இதன் சாற்றைப் பச்சரிசி மாவுடன் கலந்து, கட்டிகள் உள்ள இடத்தில் வைத்துக் கட்டினால் கட்டிகள் உடையும்.
துத்திப்பூச் சாற்றுடன் கற்கண்டு கலந்து குடித்தால், ரத்த வாந்தி நிற்கும்.
துத்தி விதைச்சூரணத்துடன் கற்கண்டு மற்றும் தேன் கலந்து உட்கொண்டால் ‘மேகநோய்’ குணமாகும்.
இதன் இலைகளை கொதிக்கும் நீரில் வேகவைக்க வேண்டும். பின்னர் அந்த நீரைத் துணியில் பிழிந்து, உடல்வலி உள்ள இடங்களில் ஒற்றடம் கொடுத்தால் உடல்வலி குறையும்.
இது ஆண்மையைப் பெருக்கும் தன்மைகொண்டது.
No comments:
Post a Comment