உலக நீரிழிவு தினம் நாளை (நவ., 14) கடைபிடிக்கப்படும் நிலையில், தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தினால் 8 லட்சம் உயிர்களை காப்பாற்ற முடியும் என லான்செட் அறிக்கை தெரிவிக்கிறது.
இன்றைய தேதியில் உலகளவில், 46.3 கோடி மக்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது. அவர்களில் 80% பேர் குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளைச் சேர்ந்தவர்கள். 2019-ம் ஆண்டில் மட்டும் 42 லட்சம் மக்கள் சர்க்கரை நோய் ஏற்படுத்திய சிக்கல்களின் விளைவாக இறந்துள்ளனர்.
நீரிழிவு நோய் நடுத்தர வயதினரின் ஆயுட்காலத்தை 4 முதல் 10 ஆண்டுகள் குறைக்கிறது. இருதய நோய், சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோயால் இறக்கும் அபாயத்தை 3 மடங்கு வரை அதிகரிக்கிறது. மேலும் கால் ஊனம் மற்றும் கண் பார்வை பறி போவதற்கும் முக்கிய காரணியாக இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.தற்போது உருவாகியுள்ள கொரோனா தொற்றுநோய் சர்க்கரை நோயாளிகளின் பாதிப்பை எடுத்துக்காட்டுகிறது. வைரஸ் தொற்றால் இறப்பதற்கான ஆபத்து சர்க்கரை நோயாளிகளுக்கு 2 மடங்கு அதிகம் உள்ளது.
பயனுள்ள சிகிச்சைகள் மற்றும் தடுப்பு உத்திகள் இருந்தாலும் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தடைகள் நிலவுவதாக லான்செட் சர்க்கரை நோய் ஆணையம் கூறியுள்ளது. இந்த இடைவெளியை குறைப்பதற்காக 44 நிபுணர்களை இணைத்து நான்கு ஆண்டுகள் ஆய்வு செய்து ஒருங்கிணைந்த உத்திகளை உருவாக்கியுள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு உதவ மருத்துவர் அல்லாத ஊழியர்களுக்கு பயிற்சி வழங்குவது போன்றவை அத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும் நீரிழிவுநோயை திறம்பட நிர்வகிக்க குறிப்புகளை வழங்கியுள்ளது.
அவை:உடல் பருமன் உள்ள நோயாளிகளுக்கு 15 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட எடை குறைப்பு டைப் 2 நீரிழிவு நோயை 2 ஆண்டுகள் வரை தள்ளிப்போக செய்யும்.
இரத்த சர்க்கரை அளவை 0.9% குறைத்தல், ரத்த அழுத்தத்தை 10 புள்ளிகள் குறைத்தல், கொழுப்பு செறிவை 1 எம்மோல்/லி அளவுக்கு குறைத்தல் ஆகியவை டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் மரணங்களை 10-20% குறைக்கும்.
ரத்த அழுத்தத்தை குறைக்கும் ஸ்டேடின்கள் மற்றும் ஆர்.ஏ.எஸ் தடுப்பு மருந்துகளை பயன்படுத்துவது சர்க்கரை நோயாளிகளுக்கு இதய மற்றும் சிறுநீரக பாதிப்புகளை 20 முதல் 40% வரை தடுக்கும்.
சுகாதார வசதிகளை மறுசீரமைப்பத்தல் மற்றும் குழு அடிப்படையிலான ஒருங்கிணைந்த கவனிப்பைப் பயன்படுத்துவது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இதய பாதிப்பு உள்ளிட்ட இறப்பு காரணிகளை 20 முதல் 60% குறைக்கும்.
அத்தியாவசிய மருந்துகளை அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்து, மேற்கூறியவற்றை பின்பற்றினால் மூன்று ஆண்டுகளில் 8 லட்சம் மரணங்கள் வரை தவிர்க்கலாம் என்கின்றனர்.
No comments:
Post a Comment