JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, August 24, 2022

தலைமையாசிரியை வருவதற்குள் பள்ளி ஆய்வுக்கு சென்ற கமிஷனர் ஆசிரியர்கள் ' டுவிஸ்ட் ' ; சுற்ற விட்டது ' எமிஸ் '


மதுரையில் கல்வித்துறை நடத்திய 'டீம் விசிட்'டில் பெருங்காமநல்லுார் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை கலைச்செல்வி பள்ளிக்கு வருவதற்குள், கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் ஆய்வுக்கு சென்று அதிர்ச்சி அளித்தார்.

மதுரையில் கமிஷனர், இணை இயக்குனர் ராமசாமி, தேனி சி.இ.ஓ., செந்திவேல்முருகன் குழு பள்ளி ஆய்வில் ஈடுபட்டது. இக்குழு எந்த பள்ளிக்கு வரும் என ஒட்டுமொத்த ஆசிரியர்களும் எதிர்பார்த்த நிலையில், உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லுாருக்கு காலை 9:00 மணிக்கு கமிஷனர் சென்றார்.மாணவர்கள் வந்திருந்தனர். ஒரு ஆசிரியர் தவிர தலைமையாசிரியை, பிற ஆசிரியர்கள் வரவில்லை. அதுவரை பள்ளிக்கு வெளியே காரில் கமிஷனர் காத்திருந்தார். இத்தகவல் தெரியாமல் காலை 9:20க்கு மேல் வழக்கம் போல் பள்ளிக்கு ஆசிரியர்கள் வந்தனர்.

அப்போது "காலை 9:10 க்கு ஏன் பள்ளியை துவங்கவில்லை" என கமிஷனர் கேட்டபோது, "திருமங்கலத்தில் இருந்து இக்கிராமத்திற்கு பள்ளி நேரத்தில் ஒரு பஸ் மட்டுமே காலை 9:15 மணிக்கு வருகிறது. கல்வித்துறை வழிகாட்டுதல்படி 20 நிமிடம் தாமதமாக பள்ளி துவங்கி மாலை 4:10க்கு பதில் 4:30 மணி வரை பள்ளி செயல்படுகிறது" என தெரிவித்தனர். இப்பதிலை எதிர்பார்க்காத கமிஷனர் சமாதானமானார்.

சுத்தவிட்ட 'எமிஸ்'

பள்ளியில் ஆவணங்களை பார்வையிட்டபோது, 'ஆன்லைனில் பதிவேற்றவில்லையா' என கேள்வி எழுப்பினார். அதற்கு 'இப்பகுதி கிராமங்களில் இணைய சேவை சரியாக கிடைப்பதில்லை' என்றனர். 'எமிஸில் மாணவர் வருகை பதிவை ஆய்வு செய்தபோது வழக்கம் போல் 'நெட்ஒர்க்' கிடைக்காமல் 'சுற்றிக் கொண்டே' இருந்தது கண்டு அதிர்ச்சியுற்றார். பின்னர் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு பள்ளிக்கு பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் சின்னக்கட்டளை, எம்.சுப்புலாபுரம் அரசு பள்ளிகளில் ஆய்வு செய்தார். இதுபோல் மற்ற குழுக்கள் பாலமேடு, மாலைப்பட்டி, அலங்காநல்லுார் பகுதிகளில் ஆய்வு நடத்தின.

No comments:

Post a Comment