பணி அனுபவ பலன்கள் பெற, விண்ணப்பிக்க வேண்டிய ஆவணங்களை பட்டியலிட்டு, மாதந்தோறும் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்தால், தேர்வு நிலை மற்றும் 20 ஆண்டுகள் நிறைவடைந்தால், சிறப்பு நிலை அந்தஸ்து பெறுவர். இந்த அங்கீகாரத்தால், ஊக்க ஊதியம் வழங்கப்படும்.
இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க, ஜமாபந்தி நடத்தி, ஆவணங்கள் பெறப்படும். இதை சில கல்வி அதிகாரிகள் முறையாக நடத்தவில்லை.
இதனால் அங்கீகாரம் பெறுவதில், ஆசிரியர்களுக்கு அலைக்கழிப்பு ஏற்பட்டது. உரிய பணி அனுபவம் இருந்தும், சிலரின் விண்ணப்பங்கள் கிடப்பில் இருப்பதாகவும் புகார் உள்ளது. இச்சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், மாவட்ட கல்வி அலுவலர் பாண்டியராஜசேகரன், புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பணி அனுபவ பலன்கள் பெற தகுதியானவர்கள், விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய, 27 வகையான ஆவணங்கள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன.
இத்துடன் தலைமையாசிரியர் கையொப்பம் பெற்று, ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி, அலுவலகத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளாக இருந்தால், அடுத்த பணிநாளன்று சமர்ப்பிக்கலாம்.
இந்நடைமுறையால், அந்தந்த மாதத்தில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு, தாமதமின்றி ஒப்புதல் வழங்கப்படும்.
உடனடியாக ஊக்கத்தொகை பெறும் தகுதியும் ஆசிரியர்கள் பெறுவர். தேவையில்லாத அலைகழிப்பு இருக்காது. ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவணக்குமார் கூறுகையில், ''தேர்வுநிலை, சிறப்பு நிலை அங்கீகாரத்திற்கு, ஆண்டுதோறும் முறையாக ஜமாபந்தி நடப்பதில்லை.
''அப்படியே நடந்தாலும், குறிப்பிட்ட நாளில் வேறு அலுவலக உத்தரவுகள் வரும்பட்சத்தில், அதிகாரிகள் தரப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடிவதில்லை.
''அந்தந்த மாதம் விண்ணப்பிக்கும் பட்சத்தில், கோப்புகள் கிடப்பில் போட வழியில்லை. இந்நடைமுறையை வரவேற்கிறோம்,'' என்றார்.
No comments:
Post a Comment