தமிழக மின் வாரியத்தில் கள உதவியாளர்கள் பொறியாளர்கள் உட்பட 90 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
அவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் ஊதிய உயர்வு 2019 டிச. முதல் நிலுவையில் உள்ளது.
புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட குழு 19 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. ஜன. 9ல் நடந்த பேச்சில் 5 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க இருப்பதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வழங்கிய கருத்துரு மீது ஒவ்வொரு சங்கத்திடமும் அம்மாதம் 24 25ல் தனித்தனி பேச்சு நடத்தப்பட்டது. பல சங்கங்களின் நிர்வாகிகள் 20 சதவீதம் மேல் ஊதிய உயர்வு தருமாறு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் ஊதிய உயர்வு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் வாரியத்தின் கடன் 1.59 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. கடும் நிதி நெருக்கடி நிலவுகிறது. இந்த சூழலிலும் ஊழியர்களின் நலன் காக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிதி நிலைமைக்கு ஏற்ப அனைவருக்கும் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர 15 முதல் 25 ஆண்டுகள் பணி காலத்தை நிறைவு செய்தவர்களுக்கு கூடுதலாக 3 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கங்களுடன் மீண்டும் பேச்சு நடத்தி இறுதி செய்யப்படும்.
No comments:
Post a Comment