Thursday, February 16, 2023

நான் முதல்வன்..உலகத்தர பயிற்சி..இலவசமாக கொடுக்கும் அரசு..முதல்வரிடம் பெருமிதமாக கூறிய மாணவர்கள்

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "நான் முதல்வன்" திட்டத்தில் பயன்பெற்றுவரும் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

உலகத் தரத்திலான பயிற்சிகளை கட்டணமின்றி கிராமப்புற மாணவர்களும் பயன்பெறும் வகையில் அமைந்த நான் முதல்வன் திட்டம், கல்வி பயிலும் பருவத்திலேயே பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்தது குறித்து மாணவர்கள் விவரித்தனர்.

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களை, படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய 'நான் முதல்வன்' என்கிற புதிய திட்டத்தை 1.3.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, அதனை மேலும் ஊக்குவித்து, அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்று வழிகாட்டுவதுடன், தமிழில் தனித் திறன் பெறவும், சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.

சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று சேலத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பயன்பெற்றுவரும் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் கனவு திட்டமான "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பயிற்சிகள் பெற்றுவரும் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள், இத்திட்டத்தின் மூலம் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களான Cloud Computing. Data Analytics, Machine Learning, BIM Modelling, High Rise Building, Steel Structures, Electric Vehicle Charging System Design, Artificial Intelligence, Robotics போன்ற திறன் பயிற்சிகள் பெற்ற அனுபவத்தையும், அவை அவர்களுடைய வேலை வாய்ப்பிற்கு எவ்வாறு பயன்பெற்றது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

பன்னாட்டு நிறுவனங்களான IBM, Microsoft, TCS, Infosys, Google, AWS, L and T போன்றவற்றுடன் இணைந்து உலகத் தரத்திலான பயிற்சிகளை கட்டணமின்றி கிராமப்புற மாணவர்களும் பயன்பெறும் வகையில் அமைந்த "நான் முதல்வன்" திட்டம், கல்வி பயிலும் பருவத்திலேயே பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்தது குறித்தும் விவரித்தனர்.

மேலும், படிக்கும்பொழுதே உயர்தொழில்நுட்பம் சார் தொழில் முனைவை ஊக்குவித்தும், அதன்மூலம் அவர்களுடைய பொருளாதாரம் மேம்படவும், வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப உலகத்திற்கு ஏற்ற திறன் பயிற்சிகளை "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் வழங்குவதன் மூலம் மாணவ சமுதாயத்திற்கு தன்னம்பிக்கை ஏற்படுகிறது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இச்சிறப்பான திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை அம்மாணவ, மாணவியர் தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News