Breaking

Wednesday, April 26, 2023

வெயிலில் வெளியே சுற்றாதீர்: வானிலை மையம் அறிவுரை




கோடை வெயிலின் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள, சென்னை வானிலை ஆய்வு மையம் ஆலோசனைகள் வழங்கியுள்ளது.அந்த மையம் கூறியுள்ளதாவது:கோடை வெயில் அதிகமாக உள்ள நாட்களில், நண்பகல் 12:00 மணி முதல் 3:00 மணி வரை, மக்கள் வெயிலில் வெளியே சுற்றும் நேரத்தை குறைத்து கொள்ள வேண்டும்.

சோர்வான நிலை, தலைவலி, உடல் தளர்வு, இதய துடிப்பில் அதிக வேகம், மூச்சிரைப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறி ஏற்பட்டால், அதற்கேற்ற மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.உடலுக்கு இறுக்கமும், அடர் நிறமும் அல்லாத, வெளிர் நிறமான தளர் ஆடைகளை அணிவது நல்லது.

பருத்தி ஆடைகள் வெயிலுக்கு இதமாக இருக்கும். வெயிலில் கட்டாயம் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால், தலையில் தொப்பி அணிந்தும், தோலில் சூரிய கதிர்கள் படாமல், அதற்கான களிம்பு தடவியும் உடலை பராமரித்து கொள்ள வேண்டும்.

குறைந்த அளவில், அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும். அவ்வப்போது நீர்ச்சத்தை அருந்த வேண்டும். ஓ.ஆர்.எஸ்., பானம், லஸ்சி, சாதம் ஊற வைத்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், மோர் போன்றவற்றை அருந்த வேண்டும்.திறந்தவெளியில் நிறுத்தப்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்களில், செல்ல பிராணிகளையோ, குழந்தைகளையோ தங்க வைப்பது கூடாது.

பிராணிகளுக்கு தேவையான நீர் வழங்க வேண்டும்.கோடை வெயிலால் பாதிக்கப்பட்டு, வலிப்பு ஏற்பட்ட நபரை, உடனடியாக நிழலான இடத்தில் அமர வைக்க வேண்டும்.அவரது நெற்றி மற்றும் தலையில், குளிர்ந்த நீரை தெளித்து, அவரது மயக்கத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும். 

அவரது உடலை ஈரத்துணியால் துடைக்க வேண்டும்.ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை சாறு போன்றவற்றை உடனடியாக கொடுத்து, நீர்ச்சத்தை அதிகரிக்க வேண்டும். பின், அவரை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். இவ்வாறு அந்த மையம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment