Friday, September 15, 2023

பழைய ஓய்வூதிய திட்டம் கோரி சி.பி.எஸ்., இயக்கம் போராட்டம்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர், 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களில், 2003 ஏப்., 1 அல்லது அதற்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு, சி.பி.எஸ்., என்ற பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது.

இந்த திட்டத்தில், 5.88 லட்சம் பேர் உள்ளனர். புதிய திட்டத்தில் சலுகைகள் இல்லாததால், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் போராடி வருகின்றன.

கடந்த ஆட்சியில், இவர்களின் போராட்டத்திற்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், பங்களிப்பு திட்டத்தை ரத்து செய்யக்கோரி, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரட்ரிக் ஏங்கல்ஸ் தலைமையில், சென்னையில், 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

சென்னை எழிலக வளாகத்தில், 12ம் தேதி துவங்கிய போராட்டம், இன்று காலை நிறைவு பெறுகிறது. இதில், ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் வரை, பல கட்ட போராட்டம் நடத்த, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment