Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, January 28, 2024

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் : வருமான வரி முறையில் மாற்றம்?


இரண்டு விதமான வருமான வரி முறை அமலில் உள்ள நிலையில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மாற்றம் கொண்டுவரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது உள்ள வரிமுறைகள் பற்றியும், அதில் செய்யப்பட வாய்ப்புள்ள மாற்றம் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மாத சம்பளம் வாங்குவோரின் பட்ஜெட் எதிர்பார்ப்பு என்பது, ஒவ்வொரு முறையும் வருமான வரி சலுகை இருக்குமா என்பதுதான். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால், வரி சலுகை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு முன்பைவிட அதிகரித்துள்ளது.

தற்போது பழைய வருமான வரி , புதிய வருமான வரி முறை என இரண்டு விதமான வருமான வரி முறைகள் அமலில் உள்ளன. 

பழைய மற்றும் புதிய வருமான வரி முறைகளில் எதை தேர்வு செய்வது என்பதை நாமே தீர்மானித்துக்கொள்ளலாம். பழைய வரி முறையில் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் ரூபாய் வரைக்கு வரி கிடையாது. 

புதிய வருமான வரி முறையில் இது 3 லட்சம் ரூபாயாக உள்ளது. 

பழையதில் இரண்டரை லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரைக்கு 5 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. எனினும் 5 லட்சம் ரூபாய் வரைக்கு வரிச்சலுகை இருப்பதால், வரி செலுத்தத் தேவையில்லை. புதிய வருமான வரி முறையின் கீழ் , ஆண்டு வருமானம் 7 லட்சம் ரூபாய் வரைக்கு வரிச் சலுகை உள்ளது.

பழைய வருமான வரி விகிதத்தில் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரைக்கு 20 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும்... இதுவே புதிய வருமான வரி முறையில், 9 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய்க்கு 15 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. பழையதில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு, 30 விழுக்காடும், புதியதில் 12 முதல் 15 லட்சம் ரூபாய் வரைக்கு 20 விழுக்காடு வரி வசூலிக்கப்படுகிறது. புதியதில் 15 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் 30 விழுக்காடு வரி செலுத்த வேண்டும்.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ள தரவுகளைத் திரட்டி, பழைய மற்றும் புதிய வருமான வரி முறைகளை ஒருங்கிணைக்கும் அறிவிப்பு இடைக்கால பட்ஜெட்டில் இருக்கலாம் என்கிறார் ஆடிட்டர் சுந்தரராமன்.

மேலும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் ஆடிட்டர் சுந்தரராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான நபர்கள் வரி செலுத்தும்போது, இனிவரும் ஆண்டுகளில் வரி குறைப்புக்கும் வாய்ப்பு இருக்கும் என்பது பலரின் கணிப்பாக உள்ளது.

No comments:

Post a Comment