Friday, June 28, 2024

அரசு பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு


அரசு பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கு 19,530 இடங்கள் உள்ளன. இதில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் கடந்த மே 10 முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த படிப்புகளில் சேர சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். தொடர்ந்து விண்ணப்பித்தவர்களில் தகுதி பெற்றவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் அந்தந்த கல்லூரிகளில் வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

அதன்படி இரு கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டதில் இதுவரை அரசுக் கல்லூரிகளில் 9 ஆயிரம் பேர் வரை சேர்க்கையை உறுதி செய்துள்ளனர். அதேபோல், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 7 ஆயிரம் பேர் வரை சேர்ந்துள்ளனர். எனினும், கடந்த சில ஆண்டுகளை போல நடப்பாண்டும் ஒட்டுமொத்த இடங்களைவிட குறைந்த அளவிலான மாணவர்களே சேர்க்கை பெற்றுள்ளனர். இன்னும் 10 ஆயிரம் இடங்கள் வரை நிரம்பாமல் உள்ளன. இதை கருத்தில் கொண்டு எஞ்சியுள்ள இடங்களை கல்லூரிகளே (Spot Admission) நிரப்பிக் கொள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இனி மாணவர்கள் நேரடியாக அந்தந்த கல்லூரிகளில் சென்று சேர்க்கையை பெற்றுக் கொள்ளலாம். இந்த நல்வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News