SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL

Subscribe Us

Saturday, January 4, 2025

கணினி அறிவியல் பாடத்தில் முரண்பாடு - ஆர்.டி.ஐ.,யில் 'வெளிச்சம்'

தமிழகத்தில் அரசு உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களுக்கான கணினி அறிவியல் பாடத்திட்டம் குறித்து முரண்பட்ட தகவல்களை கல்வித்துறை தெரிவித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மத்திய அரசின் சமக்ரா சிக் ஷா திட்டத்தில் அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறையிலும் அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் கொண்டுவரப்பட்டது. ஆனால் தமிழக மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது. தற்போது வரை மேல்நிலை பள்ளிகளில் மட்டும் கணினி அறிவியல் பாடம் விருப்பப் படமாக உள்ளது. அதுவும் 'கணினியில் அடிப்படைக் கல்வி' என்று தான் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு நடு, உயர்நிலை பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு கணினி அறிவியல் என தனி பாடம் இல்லாமல் இணைப்பு பாடமாகவே உள்ளது. ஆனால் கணினி அறிவியல் பாடம் பள்ளிகளில் நடத்தப்படுவதாக தமிழக அரசு தொடர்ந்து தெரிவித்துவருகிறது.

இந்நிலையில் ஆர்.டி.ஐ.,யில் பெறப்பட்ட பதிலில் கல்வித்துறையின் முரண்பாடான செயல்பாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கணினி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் உள்ள கணினி அறிவியல் பாடத் திட்டம் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு ஆர்.டி.ஐ.,யில் பெறப்பட்ட பதில்கள் தற்போதைய நடைமுறையை ஒப்பிடுகையில், முரண்பட்டதாக உள்ளது.
குறிப்பாக 'உயர், மேல்நிலை பள்ளிகளில் கணினி அறிவியல் தனிப் பாடமாக நடத்தப்பட வில்லை. பாடவேளை என ஆசிரியர்களுக்கு தனியாக ஒதுக்கீடு செய்ய வில்லை. கணினி அறிவியல் பாடத்தை தியரி, செய்முறை வடிவில் கற்றுத்தரவில்லை. அதற்கான தனி ஆசிரியர்கள் நியமனம் இல்லை.

அதற்கு பதில் அறிவியல் பாட ஆசிரியரே கணினி அறிவியல் பாடம் நடத்துகிறார் ' போன்ற பதில்களை சேலம், திண்டுக்கல், காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலகங்கள் அளித்துள்ளன.

இதற்கிடையே 2024 - 2025 ம் கல்வியாண்டிற்கும் ஐ.சி.டி., திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.439.40 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதையாவது உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment