Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, May 11, 2025

கல்லூரி கைடன்ஸ்: மொழிப் பாடங்கள் கற்பதால் கிட்டும் பயன்கள் என்னென்ன?


தமிழ், ஆங்கிலம், இந்தி, அரபு, பிரெஞ்சு போன்ற மொழிப் பாடங்களை கற்பதால் ஆசிரியர் துறையில் வேலைவாப்பு பெறலாம். அரசுப் பணி மட்டுமல்ல, தனியார் துறையிலும் நல்ல ஊதியம் கிடைக்கும் என்பதால் மொழி, கலைப் படிப்புகளில் தகுதியை வளர்த்துக் கொள்ளலாம்.

ஆசிரியர் துறை மட்டுமல்ல ஊடகத் துறை, அச்சு, காட்சி, பண்பலை வானொலி, இணையம், விளம்பரத்துறை என ஊடகத் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணிவாய்ப்புகள் உள்ளன.

அடிப்படையான பட்டப்படிப்புடன், மின் பதிப்புத் துறைக்கான கணினி சார்ந்த குறுகிய காலப் படிப்புகளை கூடுதலாக மேற்கொண்டால் ஊடகத்துறைக்குள் தடம் பதிப்பதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ளலாம். படைப்புகளை எழுத, சரிபார்க்க, பிழை திருத்தம், செய்திகளைச் சேகரித்தல், தொகுத்து வழங்குதல் என காட்சி ஊடகங்களில் திரைக்கு முன், பின் வேலைவாய்ப்புகள் உள்ளன.

எழுத்து சார்ந்து மட்டுமல்ல, தொலைக்காட்சி, திரைத்துறை எனப் படைப்பு சார்ந்த அனைத்து வகையிலும் மொழிபெயர்ப்பாளர்கள் சாதிக்கின்றனர். பி.ஏ. பட்டப் படிப்போடு முதுநிலை மற்றும் ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளில் திறமையை வளர்த்து கொண்டால் அதற்கேற்ற வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

முதுநிலையிலும் அதே மொழி அல்லது இலக்கியத்தைப் பாடமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கல்வெட்டியல், சுவடியியல், நாட்டுப்புறவியல், மகளிரியல், இதழியல் என தளங்களை மாற்றிக்கொள்ளலாம்.

குடிமைப்பணி மற்றும் இதர போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கும் மற்ற பட்டப்படிப்புகளோடு மொழி பட்டங்களை தேர்வு செய்வது சிறப்பு. குடிமைத் தேர்வில் விருப்ப பாடமாக தாய்மொழியைத் தேர்வு செய்துகொள்ளலாம் என்பதால், இதர பட்டம் முடிப்பவர்களும் தமிழை விரும்பி தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.

பி.ஏ. ஆங்கிலம் படித்தவர்கள் பி.பி.ஓ., கே.பி.ஓ. போன்ற அவுட்சோர்ஸிங் துறைகளிலும், மார்க்கெட்டிங் துறைகளிலும் சாதனை படைக்கின்றனர். டெக்னிக்கல் ரைட்டிங் எனப்படும் நுகர்வோர் உபயோகப் பொருட்களின் விவரக்குறிப்புகளை எழுதுவது, இணைய தளங்களை வடிவமைப்பது போன்றவற்றில் அத்துறை வல்லுநர்களுக்கு இணையாக ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகின்றனர்.

No comments:

Post a Comment