JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, December 18, 2025

சென்னையில் 2 இடங்களில் அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையம் - விண்ணப்பிப்பது எப்படி?


சென்னையில் 2 இடங்களில் செயல்படும் அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் சேர மாணவர்கள் டிசம்பர் 22 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் பயிற்சித் துறை தலைவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கும் வகையில் தமிழக அரசின் பயிற்சி மையங்கள் சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராயா கல்லூரியிலும், சேப்பாக்கம் மாநிலக் கல்லூரியிலும் செயல்பட்டு வருகின்றன. தியாகராயா கல்லூரி மையத்தில் 500 பேருக்கும், மாநிலக் கல்லூரி மையத்தில் 300 பேருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 6 மாத காலம் வாராந்திர வேலைநாட்களில் தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதற்கான சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பயிற்சியில் சேர விரும்புவோர் www.cecc.in என்ற இணையதளத்தி்ன் வழியாக டிச.22 முதல் ஜன.5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

உணவு மற்றும் தங்கு வசதியை மாணவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். 10-ம் வகுப்பு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். அவர்களின் விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment