Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 12, 2014

மனமிருந்தால்


மனமிருந்தால்

செத்துச் செத்துப் பிழைக்கின்றேன்
சோறு தண்ணி இல்லாமல்
பித்துப் பிடித்து அலைகின்றேன்
பாவை உன்னைக் காணாமல்

நெருப்பைச்  சுருட்டி இதயத்துள்
மறைத்து வைத்த வலியைப்போல்
நெருங்கி என்னைச் சுடுகிறதே
உனது நினைவு தினம்வந்து

அழகு வண்ண தேவதையே
அழியா திருக்கும் முழுநிலவே
விழிகள் தேடி அலையுதடி
விழிக்கு விருந்து தருவாயோ

தொலைந்த பிள்ளை அலைவதுபோல்
தொடர்ந்து உன்னைத் தேடுகின்றேன்
தொலைவில் இல்லை அருகில்தான்
இருந்தும் காண மறுக்கின்றாய்

உன்னைக் கண்டு பேசிடவே
விரும்பி வந்தேன் உன்னருகில்
கண்டும் என்னைக் காணாமல்
விலகிச் செல்வது ஏன்தோழி?

இடியைத் தாங்கும் என்இதயம்
மெளனம் தாங்க மறுக்கிறது
கொடியே என்னிடம் பேசிவிடு
மௌனம் என்னைக் கொல்கிறது

வாய்ப்பேச் சில்லா நிலைகண்டு
வாய்மூ டியேநான் அழுகையிலே
ஆயத்தோடு நீசேர்ந்து
அரட்டை அடித்து சிரிக்கின்றாய்

கொஞ்சம் கூட உன்மனதுள்
இரக்கம் என்பது உனக்கிலையோ?
நெஞ்சம் உன்பால் வைத்ததற்கு
       கொடுக்கும் தண்டனை இதுதானோ?