Breaking

Friday, August 23, 2019

19 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை பாதுகாப்பு இலவசப் புத்தகம்


உலக இயற்கை நிதியம் அமைப்பு சார்பில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த 19 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை பாதுகாப்பு குறித்த புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. உலக இயற்கை நிதியம் அமைப்பு சார்பில் ஓர் உலகம் என்ற திட்டத்தின்கீழ் இயற்கை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மாவட்டக் கல்வி அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி கடந்த ஜூன் மாதம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, சென்னை வில்லிவாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி லேடி விலிங்டன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராயபுரம் புனித அன்னையர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து உலக இயற்கை நிதியத்தின் சுற்றுச்சூழல் கல்வி ஒருங்கிணைப்பாளர் எஸ்.சரவணன் கூறுகையில், ஓர் உலகம் திட்டத்தின்கீழ், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பயிலும் 19 ஆயிரம் மாணவர்களுக்கு வகுப்புக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இயற்கை குறித்த இலவசப் புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இயற்கை குறித்து பள்ளி மாணவர்கள் இடையிலான போட்டி வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது என்றார்.