புதுடில்லி: தேர்தல்களில், கள்ள ஓட்டுப் போடுவதை தடுக்க வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், ஆதார் எண் அவசியம் என, மத்திய அரசு தீவிரம் காட்டியபோது, தேர்தல் ஆணையம் அடக்கியே வாசித்தது. வாக்காளர் அட்டையை, ஆதாருடன் இணைப்பதையும் அவரவர் விருப்பம் என்ற, அளவிலேயே நின்றது. ஆனால், தற்போது, தேர்தல் ஆணையம், இவ்விஷயத்தில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது.
மத்திய சட்ட அமைச்சகத்துக்கு, தலைமை தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தின் விபரம்: இதுவரையில், 32 கோடி ஆதார் எண்கள், வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில், கள்ள ஓட்டுப் போடுவது உட்பட, பல்வேறு தில்லுமுல்லுகளை களைவதற்கு, ஆதார் எண் இணைப்பு அவசியம். எனவே, ஆதார் எண்ணை, வாக்காளர் அட்டையுடன் இணைப்பதற்காக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950ல், திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.