ஆனைமலை:ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், 'ஆன்லைன்' கல்வி பயில முடியாத மாணவர்களுக்கு, வீட்டுக்கு அருகிலேயே சென்று பாடம் நடத்தி வருகின்றனர்.
பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், 145 மாணவர்கள் படிக்கின்றனர். வீடுகளில் இருந்தவாரே, 'ஆன்லைன்' முறையில் கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில், கிராமப்புறத்தில் இருக்கும் பல்வேறு மாணவர்களின் பெற்றோரிடம், 'ஸ்மார்ட் போன்' வசதி இல்லை; வீடுகளில் டி.வி.,யும் இல்லை.
இதனால், மாணவர்கள் 'ஆன்லைன்' கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே சென்று, மரத்தடியிலும், கோவில்களிலும் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தி அசத்தி வருகின்றனர்.
தமிழாசிரியர் பாலமுருகன் கூறியதாவது:முதற்கட்டமாக, 'ஆன்லைன்' கல்வி பயில வாய்ப்பில்லாத, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.
மாணவர்கள் கூட்டம் சேர்வதை தவிர்க்க, மேட்டுக்காலனி, வடக்குவீதி, ராஜேந்திரபுரம் ஆகிய மூன்று பகுதிகளில், கோவில்கள், மரத்தடியில் பாடம் நடத்தப்படுகிறது.
ஒரு இடத்தில், எட்டு பேர் வரையில், சமூக இடைவெளி விட்டு அமர வைத்து, கிருமிநாசினி தெளித்து, பாதுகாப்பான முறையில் பாடம் நடத்தப்படுகிறது.
வாரத்துக்கு இரண்டு நாட்கள் தலா, இரண்டு மணி நேரம் பாடம் நடத்தப்படுகிறது. வீட்டுப்பாடம் வழங்கி, சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு, பாடம் நடத்தப்படுகிறது.
அடுத்தகட்டமாக, பத்தாம் வகுப்பில் மற்ற பாடங்களுக்கும், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், வீடுகளுக்கு அருகில் பாடம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு, தெரிவித்தார்.
No comments:
Post a Comment