முகக்கவசம், தனிமனித இடைவெளியால் கரோனா தொற்றின் வேகம் குறையும் என்று ஐஐடி புவனேஸ்வர் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கூல் ஆஃப் மெக்கானிக்கல் சயின்ஸ் துறையின் உதவிப் பேராசிரியர் வேணுகோபால் அருமுரு தலைமையில் கரோனா பரவல் வேகம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
''ஒருவருடைய தும்மலின்போது வெளியேறும் சிறிய நீர்த்திவலைகள் அதிகபட்சமாக 25 அடி வரை கூடச் செல்லும். எனினும் முகக்கவசமும் முக அங்கியும் அணிந்திருக்கும்பட்சத்தில் நீர்த்திவலைகள் 1 முதல் 3 அடியுடன் நின்றுவிடும். முகக் கவசத்தால் நீர்த்திவலைகள் கசிவதை முழுமையாகத் தடுக்க முடியாது. இதனால் தனிமனித இடைவெளியும் அவசியம்.
அதேபோல் முகக்கவசம் அணிந்தபோதிலும் இருமும்போதும் தும்மும்போதும் நீர்க்கசிவைத் தடுக்க கைகளோ, முழங்கையாலோ வாயை மூடிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். தொடர்ச்சியான நகர்வு சூழலில் சிறிய நீர்த்துளிகள் அல்லது துகள்களின் இயக்கமே கரோனா வைரஸின் பரவலை ஏற்படுத்துகிறது.
இந்த ஆய்வு முடிவுகள் மூலம் ஆய்வாளர்கள் பாதுகாப்பான முகக்கவசங்களைத் தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்த முடியும். குறைந்தது 6 அடி தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்''.
இவ்வாறு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை அமெரிக்க பிஸிக்கல் சொசைட்டியின் ஆய்விதழில் சிறந்த கட்டுரையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment