அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திருப்பி வழங்கப்படும் மருத்துவ இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லதா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கொன்றை தாக்கல் செய்தார்.
அவர் அளித்த மனுவில், 'அரசுப்பள்ளியில் பயின்ற என் மகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்டார். அவருக்கு அண்ணாமலைபல்கலைக் கழகம் கிடைத்தது. ஆனால், ஆண்டுக்கு ரூ. 5.54 லட்சம் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியதால் குடும்ப வறுமை காரணமாக கைவிட்டோம்.
ஆனால், நவம்பர் 21 ஆம் தேதி அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவப்படிப்பு கல்வி கட்டணங்களை அரசு ஏற்பதாக அறிவித்தது. குடும்ப வறுமை காரணமாக என் மகளைப் போன்று பலர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். எனவே, அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் தமிழக அரசு தரப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திருப்பி வழங்கப்படும் மருத்துவ இடங்களிலும், காலி இடங்களிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கினை நீதிபதிகள் முடித்து வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment