JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, December 26, 2022

ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து விலக்கு தேவை; ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதி தேர்வு நிபந்தனையால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் 1000 பேரின் வாழ்வாதாரம் காக்க டெட்' தேர்வில் இருந்து விலக்குஅளிக்க வேண்டும், என தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில செய்தி தொடர்பாளர் கே.சிவஞானம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் முறையாக பணி நியமனம் பெற்ற 1000 ஆசிரியர்கள் மட்டும் 10 ஆண்டுகளாக தகுதி தேர்வு (டெட்) நிபந்தனையால் பாதிக்கப்பட்டுஉள்ளோம். அதே நேரம் 2012ம் ஆண்டு நவ.,16ல் தகுதி தேர்வு நிபந்தனையுடன் பணியேற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் கல்விதுறை (பணியாளர்) இணை இயக்குனர் உத்தரவால் காப்பாற்றப்பட்டனர்.

அதே போன்று அரசு உதவி பெறும் சிறுபான்மைபள்ளி ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு நிபந்தனையை ரத்து செய்து, புத்தாக்க பயிற்சி மட்டும் அளிப்பதாக கூறி அவர்களையும் அரசு காப்பாற்றியது. ஆனால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு, புத்தாக்க பயிற்சி அளித்து பாதுகாப்பதாக கடந்த ஆட்சியில் கல்வி அமைச்சர் உறுதி அளித்தார். ஆனால் அந்த உறுதியை நிறைவேற்றவில்லை. இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்காலிகமாக எங்கள் பணியை பாதுகாக்கிறோம்.

ஆசிரியர் தகுதி தேர்வை காரணம்காட்டி இது வரை எங்களுக்கு கிடைக்கவேண்டிய பதவி, சம்பள உயர்வு, ஈட்டிய விடுப்பு, பணிப்பதிவேடு துவக்குதல், விடுப்பு அனுமதிப்பு, தகுதிகாண் பருவம் நிறைவேற்றல், பணி வரன்முறை செய்தல் போன்ற எண்ணற்ற நடைமுறைகளை அரசு அனுமதிக்க மறுக்கிறது. தமிழக அரசு, தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment